(2502)

(2502)

எங்கோல் வளைமுத லாகண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்

செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்திறல் சேரமர்

தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோள்

நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய் யாதினி நானிலத்தே?

பதவுரை

திறல் சேர்

வலிமை பொருந்திய
அமரர் தம்

தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய

தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்

தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லாயவர்க்கும் தம்கோன்

பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்

(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்

விரும்பித் தரித்துள்ள
துழாய்

திருத்தழாயானது
எம்கோல்வளை முதல் ஆ

எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்

அப்பெருமானது உபய விபூதியையும் பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி

இங்ஙனமான பின்பு,
நானிலத்து

இவ்வுலகத்தில்
என் செய்யாது

(அந்தத் திருத்துழாய்) வேறு எத்தீங்கைத்தான் செய்ய மாட்டாது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தலைமகனது காரில்  ஈடுபட்ட தலைவி ஆற்றாது கூறல் இது. முன்பு ஸம்ச்லேஷித்திருந்த மையத்தில் தலைமகனுடைய தேஹத்தின் ஸ்பர்சத்தினால் இன்பம் தந்த திருத்துழாயானது, விச்லேஷ நிலைமையில் அவ்வின்பத்தை ஞாபகப்படுத்தி ஆற்றாமையை அதிகரிக்கச் செய்து அதனால் உடம்பு மெலிந்து கைவளைகள் கழன்று விழப்பண்ணிற்று; இதனால் பக்ஷபாதமில்லாமல் எல்லாவுயிர்களையும் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது செங்கோண்மைக்கும் ஒரு குறையை உண்டாக்குகின்றது; (அதாவது- என்னைப் பாதுகாவாமையாகிய குறை.) இன்னும் என்ன பாடுபடுத்துமோ? என்று தலைவி இரங்குகின்றாள். இப்பாசுரத்தைத் தாய் வார்த்தையாகக் கொண்டாள். ‘எங்கோல்வளை முதலா என்பதற்கு- அழகிய வளையையுடைய எமது மகள் நிமித்தமாக என்று பொருள் கொள்ளவேணும். அதுவும் ஒக்கும். இனி, தலைவனான கண்ணபிரான்தானே (பிரிந்து போய் மீண்டு வாராது உபேக்ஷிப்பதால்) எம். கோல்வளை காரணமாக உபய விபூதி ரக்ஷகமான தன் செங்கோலுக்கு ஒரு வளைவை உண்டாக்கிக்  கொள்ளுகிறான்; இதற்குமேல், அவனது பரிவாரமான திருத்துழாய்தான் என் செய்ய மாட்டாது? என்றும் பொருள் கொள்ளலாம்: அவன் உபேக்ஷித்தமாத்திரத்திலே இது அழிக்குமென்று கருத்து. என்னுடைய வளை நிமித்தமாக இவனே அழிக்கத் தொடங்கினால் வேறு ரக்ஷிப்பரர் ஆர்? என்க.

“தோளிணை மேலு நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும், தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழா யுடையம்மன்” என்றபடி திருத்துழாய் எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியமாதலால் ‘நங்கோனுகக்குந் துழாய்’ எனப்பட்டது.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசார்த்தம்: – எம்பெருமானுடைய போக்யதையிலே விடுபட்ட ஆழ்வார் அந்த போக்யதாப்ரகர்ஷம் தமக்கு ஆற்றாமையை மிகுவித்து வருத்துவதாதலைக் கூறுவதாம்.

எல்லாயவர் என்பதில், ‘எல்லாம்’ – பகுதி; மகரம் கெட்டது; ய்- எழுத்துப்பேறு; அ- சாரியை; வ்- சந்தி; அர்- விகுதி: எல்லாரும் என்றபடி. நானிலம் – பண்புத்தொகையன்மொழி, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர்.

முதலடியில், ‘விண்ணுமளிக்கும்’ எனச் சக்தியாக வேண்டுமிடத்து ‘விண்ணும்மளிக்கும்’ என மகரவொற்று மிக்கது விரித்தல் விகாரம்; தலை தட்டாமைக்காக.

English Translation

Because of my bangled daughter, this Tulasi, -that the Lord of gods, the lord of celestials, the lord of all, our own lord revels in, -has become a blemish on the just rule of Krishna over the sky and Earth. Alas! Now what more may happen in the four-parted world?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top