(2503)

(2503)

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!

கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்

தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே.

பதவுரை

கால்நிலம்

(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு

(தன் கிரணமுகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
கல்நீர் அறமென்று

ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட

அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்

வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்

உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை

பாலை நிலத்தை
கடந்த

தாண்டிவந்த
பொன்லே

பொன்போன்றவளே!.
விண்ணோர்

மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்

(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா

கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது

அடுத்துள்ளது.
அம் பூ தேன்

அழகிய பூவையும் தேனையுமுடைய
இள

இளமை மாறாத
சோலை

சோலையானது
அப்பாலது

அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது

(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நகர் காட்டல் என்பது இப்பாட்டுக்குத் துறை. நாயகன் நாயகியை உடன் கொண்டு இடைவழிப் பாலை கடந்து தன் ஊர்க்குப் போகும்போது அவளுக்கு வழி நடைவிளைப்புத் துன்பம் தோன்றாதிருக்கும் பொருட்டு அவளை நோக்கி ‘அதோ தெரிகின்ற அப்பெரிய நகர் காண் நம்முடைய நகராவது’ என்று தனது நகரைக் காட்டி ஸாமீப்பம் தோன்றக் கூறுதல் நகர் காட்டலாம். “புணர்ந்து உடன் போன தலைமகன், நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப்பெய்தமை சொன்ன பாசுரம்” என்பது அழகிய மணவாள சீயருரை வாக்கியம். நாயகனும் நாயகியும் தாம் ஒருவர்க்கொருவர் தனி நிழலாயிருக்கையாலே இவர்களுக்கு இந்நிலத்தின் கொடுமையாலுண்டாகு மிளைப்பு இல்லையேயாகிலும் பொழுது போக்குக்காக நாயகன் நாயகியை நோக்கி இங்ஙனங் கூறினதென்றதுமுண்டு. நாயகீ! நம்முடைய வழி  நடையிலல் தைவாதீனமாய்ப் பாலை நிலம் தாண்டியாயிற்று; அது இனித்தாண்ட வேண்டியதாயிருந்தால் வெகு கஷ்டப்பட வேண்டியதாகும்; நல்ல காலமாய் அதைத் தாண்டிவிட்டோம்; இனி நமது நகர் சமீபத்திலுள்ளதே காண் என்கிறான்.  ஸூரியனானவன் நால்வகை நிலங்களையும் தன் கிரண முகத்தாலே வாயிற் பெய்துகொண்டு ஸாரமான நீர்ப்பசை அறும்படி நன்றாக மென்று அஸாரத்தை உமிழ்ந்த பாகமே பாலை நிலமாகும்; அதனைத் தாண்டியாயிற்று.

நானிலம் வாய்க்கொண்டு = நால்வகை நிலங்களாவன- முல்லை குறிஞ்சி மருதம் செய்தன என்பன; காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாம், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாம்; நாடும் நாடு சார்ந்த இடமும் மருதமாம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தலாம். இவை தவிர, பாலை நிலம் என்று தனியே ஒரு நிலமுண்டென்பது சிலரது கொள்கை. அது நீரும் நிழலுமில்லாத கொடு நிலம். கீழ்ச்சொன்ன நால்வகை நிலங்களும் தம் தம் தன்மை கெட்ட விடத்தே பாலையாமென்கிற கொள்கை இங்குக் கொள்ளப்பட்டதாகும். “நானிலம் வாய்க்கொண்டு நன்னீரறமென்று கோதுகொண்ட வேனிலஞ்செல்வன் சுவைத்துமிழ்பாலை என்றவிதனால், இயற்கையில் பாலைக்குத் தனியே நிலமில்லாமையும் நால்வகை நிலங்களும் தந்தம் தன்மை திரிந்து பாலையாதலுமாகிய உண்மை விளங்குமன்றோ. சிலப்பதிகாரத்தில் (காடு காண் காதை 60-66) “கோத் தொழிலாளரோடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, வேனிற் கிழவனொடு வெங்கதிர் வேந்தன், தானலந்திருகத் தன்மையிற் குன்றி, முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற்றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலையென்பதோர் படிவங்கொள்ளும்” என்றது காண்க. இங்கே நம்பிள்ளை யீடுங்காண்க:- “நிலந்தான் நாலென்பாரும் அஞ்சென்பாருமா யிருக்கும்; ஐந்தென்கிறவர்கள் பாலைநிலத்தையும் தன்னிலே ஒன்றாக்கிச் சொல்லுவர்கள். நாலென்றவர்கள் இப்பாலை நிலந்தான் மற்றை காலிலும் உண்டென்கிறார்கள்; அதாகிறது- நீரும் நிழலுமில்லாத விடம் பாலையா மத்தனையிறே” என்று.

பாலை நிலத்திற்கு அஸாதாரண லக்ஷணம் நீரில்லாமையே என்பது நன்னீரற மென்று என்றதனால் விளக்கப்பட்டது. ஸூர்யன் தன் கிரணங்களால் பூமியிலுள்ள நீரைக் கவர்கின்றானென்பது “நானிலம் வாய்க்கொண்டு நன்னீரறமென்று” என்றதனால் காட்டப்பட்டது. நால்வகை  நிலத்துள்ளும் பாலைநிலம் அஸாரமென்பதும், இன்பத்திற்கன்றிப் பிரிதல் துன்பத்திற்கு உரியதாகிய இதன் கொடுமை ‘கோதுகொண்ட+ என்றதனாலும் ‘மென்று சுவைத் தமிழ்’ என்றதனாலும் குறிக்கப்பட்டதாம். இந் நிலத்துக்கு உரிய காலமாகிய நடுப்பகலும் இளவேனில் முதுவேனில்களும் ‘வேனில்’ என்றதனால் தெரிவிக்கப்பட்டது. ‘வேனிலஞ் செல்வன் சுவைத்தமிழ்பாலை’ என்றதனால் உஷ்ண கிரணங்களை இயல்பிலுடைய ஸூரியனும் வெறுக்கும்படியுள்ளது பாலையின் கொடுமை என்பது தோன்றும். ‘நன்னீரறமென்று கோதுகொண்ட வேளிலஞ் செல்வன்” என்றபின் மீண்டும் ‘சுவைத்து’ என்றது- சிறிதும் நீரில்லாதபடி பசையறப்பருகினமை தோன்றுதற்கு. பாலை- நீரும் நிழலுமில்லாத வறுநிலம்.  வடமொழியில் மருகாந்தாரமெனப்படும்.

பாலை கடந்த பொன்னே! = இப்படிப்பட்ட கொடிய அந்நிலத்தைக் காலால் நடந்து கடந்துவந்து மிக வருந்தவேண்டிய நிலையிலும் நாயகனைப் பிரியாது அவனுடன் வருதலையே ஓரின்பமாகக் கருதி, எரிகிற நெருப்பில் ஓடவைத்த பொன்போல ஒளிவிகிற தன்மையைக் கூறி விளித்தபடி. பொன்- உவமையாகு பெயர்; திருமகள் போன்றவளே! என்றதாகவுமாம். (கால்நிலந்தோய்ந்து விண்ணோர் தொழுங்கண்ணன் வெஃகா உது) தேவர்கட்கு இந்நிலவுலகத்தில் கால்தோயாமை இயல்பு; அது மாறிக் கால் நிலந்தோய்வரென்று கூறினது அவ் வுலகத்தினும் இத்திவ்ய தேசத்துக்குள்ள மஹிமையைக் காட்ட. நிலத்தில் கால் தோய்பவரான மண்ணுலகத்தோரும் கால் பொருந்துதற்கு அரிய பாலையின் வெப்பத்தைத் தணிக்கவல்லதான திருவெஃகா கால்நிலந் தோயாதவரான விண்ணுலகத்தோரும் கால் பொருந்தும்படியானதென நயங் காண்க. அன்பு மிகுதியால் இடம்பாராது கால் தோய்வர்.

திருவெஃகாவில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் பத்துடையவர்க் கெளிமையால் (இவ்வரலாற்றின் விவரணம் திருமழிசையாழ்வார் வைபவத்திற் காணத்தக்கது.) கணி கண்ணர் சொற்கேட்ட திருமழிசைப் பிரான் சொன்னபடி தான் செய்து ‘சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள்’ என்றும் ‘யதோக்தகார்’ என்றும் திருநாமம் பெற்றமை தோன்ற ஸௌலப்யத்தைக் குறிக்கிற ‘கண்ணன்’ என்னும் திருநாமத்தாற் குறித்தது. வெஃகா- நூற்றெட்டுத் திருப்பதிகளுள் தொண்டை நாட்டில் காஞ்சீபுரமென்கிற பெருமாள்

கோவிலுள்ளதொரு திவ்யதேசம். இத்தலத் தெம்பெருமான், பிரமன் செய்த வேள்வியை அறிக்கவந்த வேகதி கதியைத் தடுக்கும் பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கிற் பள்ளிகொண்டவனாதலால் அப்பிரானுக்கு வடமொழியில் ‘வேகாஸேது’ எனத் திருநாமம்; அது தமிழில் வேகவணை யென்று மொழி பெயர்ந்தது; அது பின் (நாகவனை யென்பது நாகணையென விகாரப்படுதல்போல) ‘வேகணை’ என விகாரப்பட்டு அது பின்னர் வெஃகணை யெனத் திரிந்து, தானியாகு பெயராய்த் தலத்தைக் குறித்து, அது பின்பு ‘வெஃகா’ என மருவி வழங்கிற்றென்ப. ஆழ்வார்களுட் சிறந்த இந்த நம்மாழ்வார் தமது முதல் திவ்யப்பிரபந்தமாகிய இத்திருவிருத்தத்தில் திருவேங்கடம், திருவெஃகா, திருவரங்கம் என்ற மூன்று திருப்பதிகளை மாத்திரமே மங்களாஸாசனஞ் செய்தமை பற்றி அம்மூன்றும் ‘கோயில், திருமலை, பெருமாள் கோயில்’ என்று சிறப்பித்துக் கூறப்படுமென்பர் பெரியோர்.

உது – மிகவும்  தூரஸ்தமும் மிகவும் ஸமீபஸ்தமு மல்லாமல் நடுத்தரமாகவுள்ளது. உசுரச் சுட்டியாய் பிறந்த பெயர். இளஞ்சோலை- எப்பொழுதும் இளவேனியாகிய வஸந்த காலமாகவே செழித்துத் தோற்றுகிற சோலை; இது கூறினது தாபங்கணிதற்குத் தக்க இடமென்று காட்ட. நல்ல குறிஞ்சி நிலத்திலே கூடி அரிய பாலைநிலத்தைக் கடந்து இனிய மருதநிலம் புகுகிறோமென்று காட்டியபடி. ‘எப் பாலைக்கும்’ என்பதில் பாலை என்பது இலக்கணையாய துன்பத்தைக் குறித்தது; பான்மை என்னும் பண்புப் பெயர் மை விகுதிபோய் ஐவிகுதி பெற்றுப் பாலையென நின்றதெனக் கொண்டு ‘எந்த நிலைமைக்கும்’ என வுரைத்தலுமாம். எப் பாலைக்குஞ் சேமத்ததே’ என்றவிடத்து நம்பிள்ளை வீடு;- “எல்லாப் பாலை நிலங்களால், வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமுமான தேசங்காண் அது (வெஃகா); இந்தப் பாலை நிலமேயன்றிக்கே இன்னமுஞ் சில பாலைவனமும் கடக்கலாங்காண் இந்நிலை முண்டாக’

அப்பாலது- அவ்வித்திலுள்ள என்றபடி. (பால் – இடம்.) அன்றியே, திருவெஃகாவுக்கு அப்பாலுள்ள (அருகிலுள்ள) திருத்தண்கா என்னுந் திருப்பதியைத் திருவுள்ளம் பற்றி ‘அம்பூந்தேளினஞ் சோலை அப்பாலது’ என்றருளிச் செய்ததாகவும் கொள்ளலாம். (திருத்தண்கா… விளக்கொளி யெம்பெருமான் ஸந்நிதி; வடமொழியில் ஹிமோபாவந மெனப்படும்.) பாலைவனத்து நடந்து செல்கிற ஸ்ரீராம லக்ஷ்மணர்க்கு விச்வாமித்ர மஹாமுனிவன் உபதேசித்த பலை அதிபலை என்னும் மந்திர வித்தைகள்போல இத்தலைவன் வார்த்தை தலைவிக்குத் தாபந்தணிக்கு மென்க.

ஆழ்வார் கொடிய  ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த தன்மையையும் எம்பெருமானுகந்தருளின நிலத்தின் பரம யோக்யதையையும் அவர்க்குப் பாகவதர் எடுத்துக்கூறி அவராற்றாமையைத் தவிர்த்தல் இப்பாட்டுக்கு ஸ்வாபதேசமாகும். முன் இரண்டடி- ஒளிவடிவனான எம்பெருமான் பலவகை நிலைகளையும் திருவுள்ளத்திற்கொண்டு ஆராய்ந்து  அவற்றில் அஸராமென்று கழித்தலும் பசையற்றதும் வெப்பம் மிக்கதுமான ஸம்ஸாரத்தைக் கடந்து மிக்க ஒளிபெற்றவரே! என்று ஆழ்வாரைப் பாகவதர் விளித்தபடி. பின் இரண்டடி… மீளாவுலகத்தவரான நித்திய ஸூரிகளும் மீண்டு வந்து வஸிக்கும்படியான மஹிமையுள்ள அர்ச்சாவதார ஸ்தலம் அரிஸமீபமாய் மிக இனிமை தருவதாய் எவ்வகைத் துன்பமும் தவிர்ப்பதாய் க்ஷேமங்கரமான புகலிடமாய் உள்ளது உள்ளபடி.

சேமம்…. சேக்ஷமமென்ற வடசொல் விகாரம்..

English Translation

The hot-tempered Sun eats up the four-parted Earth, Sucks in the juice and spits out the dry desert, O Precious girl who has just crossed that region! Celestials come down to Earth and worship the lord Krishna in Vehka, which is close at hand, Just beyond it is the fragrant nectar-grove-surrounded Tiruttankal.  If gives relief to one in any condition, So hold on!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top