(2504)

(2504)

சேமம்செங் கோனரு ளே,செரு வாரும்நட் பாகுவரென்

றேமம் பெறவையம் சொல்லும்மெய் யே,பண்டெல் லாம்மறைகூய்

யமங்க டோறெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த்

தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே.

பதவுரை

செம் கோன் அருளே

(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்

நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்

முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று

பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற

உறுதிபொருந்த
வையம் சொல்லும்

உலகத்தோர் கூறுகிற
மெய்யே

உண்மைமொழியின் படியே,
அ வாடை

அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய

நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது

இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கப்பெறுகையாலே இதற்கு முன்பு துன்பஞ் செய்துகொண்டிந்த வாடை இப்போது தணிந்தபடியை நாயகி உட்கொண்டுரைத்த பாசுரம் இது. பிரிவை ஆற்றமாட்டாமல் மிக வருந்துகின்ற நாயகியை ஒருவாறு தேற்றுவிக்க விரும்பின நாயகன் இரவிடத்து ஸம்ச்லேஷித்ததாகத் தோன்றுவித்தது என்னவுமாம்.

எவ்வளவு  துன்பங்கள் அடர்ந்தாலும் அவற்றுக்குச் சலியாமல் எம்பெருமானது திருவருளே நம்மைப் பாதுகாப்பது’ என்று உறுதிகொண்டிருந்தால் பகைவரும் கண்பாரவா என்று உலகத்திற் பெரியோர் கூறுவதுண்டு; அது இப்போது மெய்யாயிற்று; எங்ஙனேயென்னில்; வாடையானது முன்பெல்லாம் பகைத்து எதிர்வந்து போருக்கு அழைத்து இரவுகள் தோறும் அக்நிஜ்வாலையை எம்மேல் வீசுந்தன்மை யுடையதாயிருந்தது; இப்போது நமது நாயகனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை யாம் பெற்றுத் தரித்ததனால் அவ்வாடை தானே இதோ வந்து குளிர்ச்சி செய்யாநின்றது காண்மின் என்று- தலைவி தாரபெறறு மகிழ்ந்தமை சொல்லுகிறது.

இயற்கையாக இன்மை தருமவையான வாடை, சந்திரன் முதலிய பொருள்கள் விரஹகாலத்தில் உத்தீபங்களாய், ஸம்ச்லேஷ காலத்தில் ஸந்தோஷகரங்களா யிருக்குந்தன்மை¬ இதனால் உணர்த்தப்பட்டதென்க.

ஸர்வேச்வரனுடைய குணவிசேஷங்களை அநுஸந்தித்து அதனால் ஒருவாறு ஆற்றாமை தணிந்த ஆழ்வார், முன்பு அப்பெருமானை ஞாபகப்படுத்திக் கொண்டு இடைவிடாது வருத்திவந்த இவ்வுலகத்துப் பொருள் இப்பொழுது இனியதாகிற தன்மையைக்கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள். எம்பெருமானுடைய கருணையே ரக்ஷகமானால் அவனுக்கு அடங்கிய அனைவரும் அநுகூலிப்பரென்று நம்புதலுண்டாம்படி உயர்ந்தோர் சொல்லும் ஸத்யவாக்கின்படியே முன்பு பிரிவாற்றாத நிலையில் வலியவந்து எதிர்ப்பட்டு எப்பொழுதும் தாபஹேதுவாய் நின்ற லௌகிகபதார்தம் – எம்பெருமானது ப்ரஸாதத்தைப் பெற்றவளவிலே அநுகூலித்து ஆற்றாமை தனிப்பதாயிற்று என்ற விதனால்- பகவத்ஸம்பந்தத்தை யிட்டுப் பார்க்குமளவில் லௌதிகதார்த்தங்களும் உத்தேச்யமாகுமென்றதாம்.

ஆசார்யஹருதயத்திலி இரண்டாம் ப்ரகரணத்தின் முடிவான சூர்ணிகையில் “பந்து சுழல் பாலை குழமணன் யாழ் தென்றல் மதியமடிசில் சாந்தம் பூணகின் சிற்றிங்தூதை முதலாவன” என்று தொடங்கி “மதீயமென்னில் விட்டகளவும் ததீயமென்னில் இதழ் வறவும் முனிவது மிக்கால மீதோ வென்னப்படும். பொங்கம் புலனில் போக்யாதி ஸமூஹம்” என்றதும் அவ்விடத்து வியாக்கியான வாக்கியங்களும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

English Translation

Happily, the popular saying that even enemies become friends when a person is in the king’s favour has come true!!  The breeze that hitherto had been breathing fire over me age after age, has now become cool and pleasant, after receiving the Tualsi garland of the lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top