(2500)
புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன்
மனமோ மகளிர்! நுங்காவல் சொல்லீர் புண்டரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோநும் இயல்புகளே?
பதவுரை
| மகளிர் |
– |
பெண்களே! |
| நும் காவல் |
– |
உங்கள் காவலுக்கு உரிய பொருள் |
| புனமோ |
– |
இந்தத் தினைப்புனமோ? (அல்லது) |
| புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் மனமோ |
– |
இப்புணத்தினருகிலே வழிச்செல்லுகிற பரவியேனான என்னுடைய நெஞ்சமோ? |
| சொல்லீவர் |
– |
சொல்லுங்கள்; |
| புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான் |
– |
செந்தாமரை மலரின் அழகிய ஒளியையுடைய காட்டை ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய |
| கண்ணன் |
– |
கண்ணபிரானது |
| வான் காடு |
– |
பரமபதத்திலே |
| அமரும் |
– |
வாஸம் பண்ணுகிற |
| தெய்வத்து இனம் |
– |
நித்யஸூரி வர்க்கத்தினர் |
| ஓர் அணையீர்கள் ஆய் |
– |
ஒருபுடை ஒத்தவர்களாய் |
| நும் இயல்புகள் |
– |
நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள் |
| இவையோ |
– |
அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கொல்லையைக் காத்துக்கொண்டிருக்கும் நாயகியையும் தோழியையுங் கண்டு நாயகன் தான் குறை வேண்டுதலைக் கூறிய துறை இது. தன் மனம் இவர்களுக்கு வசப்பட்டதைக் கூறின் குறிப்பால், தன் கருத்தைப் புலப்படுத்துகின்றவாறு, நீங்கள் புனத்தைவிட்டு நீங்காததுபோல என் மனத்தைவிட்டு நீங்குகிறீரில்லை யென்றும், புனம்போலே என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறதென்றும் கருத்துத்தோன்ற ‘பெண்காள்! உங்களைப் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ? அன்றி என் மனத்தையும் காக்கவோ? புனக்காவலோடு நில்லாமல் என் மனக்காவலிலும் வியாபரிப்பது உங்கட்குத் தகுதியன்று என்கிறான். அவர்களழகைத் தான் காணும் பொருட்டும் தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும் இவர்களுள்ள விடத்தின் ஸமீபத்தின் இவன்றான் தடுமாறித் திரிந்தமை தோன்றப் ‘புனந்தயலே வழிபோகு மருவினையேன்’ என்கிறான் அருவினையேன்= அகப்பட்டால் தப்பமாட்டாது வருந்துதற்குக் காரமான முற்பிறப்புத் தீவினையையுடையேன் என்றவாறு, மகளிர் = பெண்களுக்கு உரிய எல்லா நல்லிலக்கணமும் அமைந்தவர்கள்; அண்மைவிளி, ‘புனமோ’ ‘மனமோ’ என்றவிடங்களில் ஓகாரங்கள்- வினா.
(புண்டரீகத்தித்யாதி.) திருக்கண்ணின் சிறப்பு முழுவதுக்கும் தாமரை உவமையாதற்குப் போதாத பெருமைவாய்ந்த புண்டரீகாக்ஷனுடையதான திருநாட்டிலுறையும் நித்ய ஸூரிவர்க்கமும் உங்கள் சிறப்பு முழுவதுக்கும் எல்லாப்படியாலும் உவமையாதற்குப் போதாத பெருமை வாய்ந்துள்ளவர்களான உங்கட்கு அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகள் தகுதியுடையனவல்ல என்கை.
பாகவதா ஆழ்வார்பக்கலிலே தமது நெஞ்சு துவக்குண்டபடியைச் சொல்லுதல் இதற்கு உள்ளுறைபொருள். உமது எல்லைக்கு உட்பட்ட இடமோ? அவ்விடத்தினருகிலே வழிசொல்லுகிற உம்மிடத்துப் பாசபந்தமுடைய எங்கள் மனமோ? பரதந்திரரான உமது பாதுகாப்புக்கு உரியது, சொல்லும்; கண்ணழகுமிக்கவனும் ஸர்வஸுலபனுமான எம்பெருமானது பரமபதத்தில் வஸிக்கிற நித்யஸூரிவர்க்கத்தோடு ஒருபுடை ஒப்புமை சொல்லும்படி “விண்ணுளாரிலுங் சீரியர்” என்றவாறு அவர்களினுஞ் சிறந்துள்ளவராய் நீர் செய்யுஞ் செயல்கள் உபாயாந்தரபரராய் வேறுவழிச் செல்வோரையும் உம்வழிப்படுத்திச் சீர்திருத்தியருளு மிவையோ? என வியந்தவாறு. ஆழ்வாரொருவர் எழுந்தருளியிருக்கிற இருப்பு. அயர்வறுமமார்களெல்லாரும் திரள இருந்தாற்போலே யிருக்குமாதலால் ‘தெய்வத்து இனம் ஓரனையீர்களாய்’ என்றது. ‘அனையீர்களாய்’ என்பதன் பின் ‘உள்ள’ எனவொரு விலையைக் கூட்டிக் கொள்ளுதலும், (அல்லது) ‘ஆய்’ என்பதை ‘ஆய’ என்பதன் தொகுத்தலாகக் கொள்ளுதலும் பொருந்தும். புண்டரீகம்- வடசொல்
English Translation
Ladies! Are you in charge of these groves? Or this hapless wayfarer-self’s heart? You are like a horde of celestials in the sky-world of Krishna, the lord with eyes that liken a thicket of bright lotuses. Tell me, Is this right on your part?
