(2499)

(2499)

கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட்

டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர்

தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன

வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை வைத்ததிவ் வான்புனத்தே?

பதவுரை

ஐயர்

இப்பெயரிவருடைய
கை

கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை

மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண்  எறிவு இலம்

(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்) தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு

(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை

வேட்டையாம்;
வினவுவது

(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு

(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;

(இவரது செயல்களும் சொற்களும்)

புன்  ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதனை

கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென

தமக்குள் ஒன்றொடொன்று பொருத்தமில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ

புதுமைமிக்க கேள்விகளுக்கு விடை கூறும்பொருட்டோ
எம்மை

நம்மை
இவ்வான்புனத்தே வைத்தது

இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைதத்து?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காந்தருவ விவாஹ முறைமையினால் நாயகியைப் புணர்ந்து பிரிந்த நாயகன் பின்பு தோழியின் மூலமாக நாயகியைச் சேர விரும்பி அத்தோழியைத் தனியே கண்டு தன் கருத்தை வெளிப்படையாக விரையக்கூறி வேண்டிக்கொள்ளாமல் குறிப்பாகக் கூறக் கருதி நாயகியும் தோழியும் தினைப்புனங் காத்து நின்றவிடத்துத் தழையுங் கண்ணியுமாகிய கையுறைகளை ஏந்திக்கொண்டு சென்று அவர்களை நோக்கி வேட்டைக்கு வந்தவன்போல ‘எனது அம்போடு ஒரு மதயானை இவ்விடத்து வரக்கண்ட துண்டோ?’ என்று வினாவ, அந்த நாயகனது தன்மையைப் பரிஹஸித்துத் தோழி நாயகியோடு கூறியது இது.

இந்தப் பெரியவரோ வென்னில், மரக்கிளையில் நின்றும், பறிக்கப்பட்ட தழையைக் கையிலே கொண்டு வந்து நிற்கின்றார்; ஏதோ வேட்டை நிமித்தமாக இப்புனத்தயலே போந்ததாகச்சொல்லிக் கொள்ளுகிறார்; தாம் ஒரு யானையின்மேல் அம்பு எந்ததாகவும் அவ்வம்புடனே அவ்யானை ஓடிப்போந்ததாகவுஞ் சொல்லி ‘அவ்யானை இங்கு வரக் கண்டீர்களோ?” என்றார்; இவர் மெய்யே வேட்டுக்கு வந்தவராயின் கையில் வில் இராதோ? நாணியைக் கைவிரலால் தெறித்து ஒலிசெய்ய மாட்டாரோ? அஃதொன்றுமில்லையே; ஆகையாலே அவருடைய வாய்மொழிக்கும் செயலுக்கும் யாதொரு பொருத்தமும் காணோம்; சேராச் சேர்த்தியான இச்சொற் செயல்கள் இந்த விலா விபூதியிலில்லை; கையில் தழைக்கும் வேட்டைக்கும் என்ன ஸம்பந்தம்? இப்படிப்படட் வம்பு வினாக்களுக்கு மறுமொழி கூறுவோ எம்மை எங்கள் பெரியோர் இங்கே புனங்காக்க வைத்திட்டது!” என்று பரிஹாஸந் தோற்றக்கூறியவாறு.

இவன் குறிஞ்சி நிலுத்து நாயகியாதலாலும், தழையையுங் கண்ணியையும் கையுறையாகக் கொண்டு கொடுத்துக் காணுதல் இவளது குலமுறைமையாதலாலும், தான்கொண்டு செல்லும் தழையை அவர் ஏற்றுக்கொள்வாராயின் அது தன்னை அவர் ஏற்றுக் கொள்வதற்கு அறிகுறியாகுமென்று (நாயகன்) நினைத்திருப்பதனாலும் இவன் கையில் தழையைக் கொண்டு சென்றானென்றுணர்க. அன்றியும் மரக்கொம்பிலிருந்து பறிக்கப்படட் தழை வாட்டத்தோடு கூடியிருக்குமாதலால் நாயகியைக் கூடாமையால் தனக்கு உண்டாயிருக்கிற வாட்டத்தைக் குறிப்பிடுவதற்கு ஒரு கருவியாகவும் தழை கைக்கொண்டு சென்றானென்னலாம். தோழியானவள் அத் தன்மையில் கருத்தூன்றிக் ‘கொம்பார் தழை கை’ என்றதனால்- இத்தழைதான் இவர் கைப்பட்டதனால் தளர்ச்சி பெற்றது; நாயகிக்கு இத்தன்மை நிகழகிறதில்லையே! என்று இரங்கியபடி.

‘சிறுநாணெறிவிலம்” என்பதற்கு- இப்பொழுது கையில் வில் இல்லாமையே யன்றி முன்பு வில் நாணெறிந்த தழும்புங்கூடக் கண்டிலோமென்றும், சிறிய நாண் எறியப்படுவதான வில்லைக் கண்டிலோம் என்றும் உரைப்பர். இரண்டாம் உரைக்கு, “சிறுநாணெறிவு” என்பது வில்லுக்குத் தொழிலாகு பெயராம். (வேட்டை கொண்டாட்டு.) வேட்டை யென்பது வெளி வியாஜமாத்திரமே; நாயகியின் பக்கல் வேட்கைவிஞ்சியே இவர் வந்தது என்றவாறு. (அம்பர் களிறு வினவுவது) 1. “பண்ணுற்ற தேன்மொழிப்பாவை கல்லீர்! – ஓர் பகழி மூழ்கல், புண்ணுற்றமாவொன்று போந்த துண்டோநும் புனத்தயலே!” 2. “மண்பட்ட கோடும் மதம்பட்ட வாயும் வடிக்கணைதோய், புண்பட்ட மேனியுமாய் வந்ததோ வொரு போர்க்களிறே” என்றார் பிறகும். இங்ஙனம் வினாவுதலால்- ‘இவன் கண்ணுக்கு இலக்காய் நான் படுகிறபாடு அம்பு தைத்து ஊடுருவுங்களின்றின் நிலைமை போன்றது காண்’ எனக் குறிப்பித்தானாம்.

‘நீ இங்கே வந்தது எதற்கு?” என்ன, ‘வேட்டைக்காக வந்தேன்’ என்றான்; ‘ஆயின் வில் எங்கே?’ என்ன, தழையை காட்டினான்; ‘வில் இல்லாவிடினும் அம்பாவது உண்டா? என்ன, ‘அம்பு ஆனையிலே பட்டுப்போயிற்று’ என்றான்; இங்ஙனம் பல புனைந்துரைகளை வேட்கை மிகுதியால் நாணமின்றிக் கூறினவனது பணிணை ‘ஐயர்’ என்ற உயர் சொல்லாற் குறித்து நகையாடியபடி.

இலம் – இல்லோம்; தன்மைப்பன்மை யெதிர்மறைக்குறிப்பு முற்று. வேட்டை = வேடு என்னும் குற்றியலுகரம் தன்னொற்றிரட்டி ஐகாரச் சாரியை பெற்றது. கொண்டாட்டூ = கொண்டாடுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

(புள்ளூருங் கள்வர் தம் பாரகத்து என்று மாடாதன.) உயிர்களை அவையறியாமல் தானே உரிமைகொள்பவர் என்பது ‘கள்வர்’ என்றதற்குப் பொருளாகும். சேராச் சேர்த்தியான இச்சொற் செயல்கள் இந்த மண்ணுலகத்தில் எங்குங் கண்டதில்லை; அந்த விண்ணுலகத்தில் ஒருகால் உண்டோ என்னவோ அறியோம் என்கை. தம்மில் கூடாதன = கையில் தழைகொண்டு வருவதற்கும் ‘அம்போடே ஓர் யானை வந்ததோ?’ என்று தேடுகைக்கும் ஒரு பொருத்தமில்லை யென்கை. இப்படி போய் கலந்தலையா யிரப்பினும் அவன் கேட்குங் கேள்விகள் தமக்குப் புதியனவாய் வியப்பு விளைத்தல் தோன்ற ‘வம்பார் வினா’ என்றான். வம்பார்வினாச் சொல்லவோ’ என்பதற்கு- வீண் கேள்விகள் கேட்கப்படுவதற்கோ என்றும் பொருள் கொள்ளலாம். வம்பார் வினா- இதுவரையிலுங் கேட்டறியாத வார்த்தைகள். ‘எம்மை வைத்தது இவ்வான் புனத்தே’ என்றதனால்- நாங்கள் எங்கள் பெரியோர்க்குப் பாதந்திரப்பட்டவர்கள்; ஸ்வதந்தரைகளல்லோம்; ஆதலால்,அப் பெரியோரையடுத்துப் பலரும் அறிய விவாஹஞ் செய்துகொள்ளுதல் முறைமை என்பது ஸூசிப்பித்தபடியாகும்.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப்பொருள் :- எம்பெருமானுக்கு உசுப்பாயிருக்கிற இவ்வாழ்வார் பக்கலிலே நம்முடைய சில கேள்விகளைக் கேட்போமென்று வந்த கல்விச் செருக்குடையாரை நோக்கி ‘இவர்களது சொற்செயல்கள் ஒன்றோடொன்று ஒற்றுமையின்றிப் பரஸ்பர விருத்தங்கள்’ என்று ஆழ்வாரோடு கூறுதலாம். கொம்பார் தழைகை= ஐம்புவரசையாகிய தளிர்களை இவர்கள் கைவிட்டதில்லை; சிறுநாணெறிவிலம்= ப்ரணவமஹா மந்த்ரமாகிய வில்லின் உச்சாரணமாகிய நாணொலியும் இவர்களிடத்து இல்லை. “வேட்டை கொண்டாட்டு = ஸம்ஸாரமாகிய காட்டிலுள்ள காமக்ரோதாதிகளான கொடிய விலங்குளைத் தொலைக்கத் தொடங்கிவிட்டோம். நாங்கள் என்கிற கொண்டாட்டம் மாத்திரமே இவர்களுக்கு உள்ளது. அம்பார் களிறு வினவுவது = கல்வியறிவாகிய அம்பாள் தாம் எய்யா நிற்கையில் தமது இந்திரியமாகிய யானை ச்பதாதிவிஷயங்களாகிய காட்டில் விரைந்தோடிற்றென்று அதனைப் பின்தொடர்ந்து துரத்துவதே இவர்கள் செயல். ஐயர் = இவர்களது அறிவின் பெருமிதத்தை இகழ்ந்தபடி. (புள்ளுருங்கள் வரித்யாதி.) வேதமாகிய பிரபலப் பிராமணத்தை எங்கும் பரவச் செய்பவனும் யாவருமறியாமல் மறைந்து நின்று எல்லாப் பொருளையும் பாதுகாப்பவனுமான எம்பெருமானுடைய உலகத்தில் ஒரு காலத்திலும் இல்லாதவையும் ஒன்றோடொன்று ஒற்றுமை. படாதவையுமாகிய புதிய இவர்கள் விண்கேள்விகளுக்கு உத்தரஞ் சொல்வதற்கோ எம்பெருமான் அடிமைகளாகிய எங்களை இந்த லீலாவிபூதியில் நியமித்து வைத்தது காண்க. தத்துவஞானமும் பிரபத்திமார்க்கமுமில்லாமல் போலி மார்க்கத்தாற் செருக்குடைய கற்றோரைச் சீர்திருத்தும் பொருட்டு இங்ஙனம் கூறியவாறு.

1. இறையனா ரகப்பொருளுரையிற் கண்டது.

2. தஞ்சைவாணன் கோ-72

English Translation

Sir, Your staff is wet and verdant with not a trace of a bowstring on it.  Sir, you come asking for an elephant you shot. In the wide Earth of the bird-riding wonder lord, such things have never happened. Your hunting expedition is only an excuse to enjoy yourself.  You go on asking unrelated questions, Is it for this that you detained us here in these groves?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top