(2498)
சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.
பதவுரை
| அங்கு |
– |
பரமபதமாகிற அவ்விபூதியில், |
| விண்ணோர்கள் |
– |
நித்யஸூரிகள் |
| நல் நீர் ஆட்டி |
– |
நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து |
| அம் தூபம் தரா நிற்க |
– |
அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க, (அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே) |
| ஓர் மாயையினால் |
– |
(உனது) ஒப்பற்ற மாயவகையினால் |
| ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து |
– |
(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள்தோறும் கடைந்து) சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பிவந்து |
| தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி |
– |
பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நின்று |
| அடல் ஆயர்தம் கொம்பினுக்கு |
– |
வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக |
| இமில் |
– |
முசுப்பையுடைய |
| ஏறு |
– |
(ஏழு) எருதுகளினுடைய |
| வல் கூன் கோட்டிடை |
– |
வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே |
| கூத்து ஆடினை |
– |
கூத்தாடி யருளினாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப் பிரபந்தத்தில் முதற்பாட்டும் கடைப்பாட்டும் தவிர மற்றைத் தொண்ணூற்றெட்டுப் பாசுரங்களும் அகப்பொருள்துறையிலே அமைந்தனவென்று கெள்ளவேணுமென்பது சிலருடைய கொள்கை. ஆழ்வார் தரமான தன்மையிலே அருளிச் செய்வதாக நிர்வஹிக்கக்கூடிய பாசுரங்களுக்குக் கிளவித்துறை கூறவேண்டியது அவசியமன்று என்பது பூருவாசாரியர்களின் திருவுள்ளம். இப்பாட்டு ஆழ்வார் தரமான தன்மையில் கிருஷ்ணாவதார சேஷ்டிதத்தில் ஈடுபட்டு அருளிச் செய்வதாயிருக்கையாலே துறையொன்றும் கூறாதே நம்பிள்ளை முதலான ஆசிரியர்கள் வியாக்கியானித்தருளினர். அவ்வழியே பற்றி உரைப்போமிங்கு.
முன்னிரண்டடிகளில் பரத்வத்தையும் பின்னிரண்டடிகளில் ஸௌலப்யத்தையும் பாராட்டிக் கூறுகின்றார். பரமபதத்திலே நித்தய ஸூரிகள் திருவாராதநம் ஸமர்ப்பிக்க விருக்கும் நிலைமையில் ஸ்நாநாஸநமும் அலங்காராஸநமும் ஸமர்ப்பித்து (அதாவது, திருமஞ்சனம் ஸமர்ப்பிப்பித்துத் திருமாலைசாத்தி)த் தூபம் ஸமர்ப்பிக்குமளவில் அப்புகையினால் திருமுக மண்டலம் மறையுமே, அந்த அவஸரத்தில் வெண்ணெயமுதை நினைத்துத் திருவாய்ப் பாடியிலெழுந்தருளி நப்பின்னைப் பிராட்டிக்காக எருதுகளை யடர்ந்து அவளை மணந்துகொண்டனை; பிரானே! உன் சக்தி விசேஷத்தை என்சொல்ல வல்வோம்! என்று ஈடுபட்டு அருளிச்செய்தாராயிற்று.
புகைநிழலில் ஒளித்து வருவார்போல அங்கு நின்று இங்கு வந்தமை தோன்ற “அந்தூபந்தார நிற்கவே யங்கு ஓர் மாயையினாற் போந்து” எனப்பட்டது. கோட்டிடைக் கூத்தாடினை = அவ்வெருதுகளின் செருக்கையடக்கும் பொருட்டு மிக்க தைரியத்தோடு அவற்றின் கொம்புகளினிடையே புகுந்து விரைந்து தொழில் செய்தமையைச் சொன்னவாறு.
திருவாராதனத்தின் உறுப்பான ஸ்நாநாஸநமும் அலங்காரஸநமும் நித்ய விபூதியில் நடந்தன வென்றும் போஸ்யாஸநமும் சயநாஸநமும் லீலாவிபூதியில் நடந்தன வென்றும் இங்குக் கூறியதனால் இரண்டும் அவனுக்கு வேறுபாடின்றி ஒரு நிகராக உரியவை யென்பது விளங்கும். தர்மியின் ஐக்கியம் சொல்லப்பட்டவாறு.
ஓர் மாயையினால் = பகவானுடைய ஸங்கல்பத்தைச் சொன்னபடி. ‘மாயா’ என்னும் வடசொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ஞானமென்பதும் ஒருபொருளாகும்; ஸங்கல்ப ரூபயான ஞானத்தை சொன்னபடி ஸம்பவாமி ஆத்ம மாய்யா (பகவத்கீதை) என்ற விடத்தும் இப்பொருள் காண்க. அன்றியே, மாயையினால்- மாயவகையினால் என்றுமாம். ஈட்டிய வெண்ணெய் = களவினால் உண்ண: “மாயை தொடு பட்டிமை வஞ்சனையாகும்” (பிங்கலந்தை – பண்பிற்செயலிற்பகுதிவகை- 135) என்றது காண்க. அடலாயர்- பிரபலரான இடையர் என்றபடி. கொம்பு – உவமையாகுபெயர்; வஞ்சிக்கொம்புபோல் துவண்ட இடையையுடையவளென்று மாதர்க்கு வாசகம். ஆடினை – முன்னிலை பிறந்தகால வினைமுற்று.
சிலருடைய கொள்கைப்படி இப்பாசுரத்திற்கும் அகப்பொருள்துறை கூற வேண்டில் ‘ஏறுகோள் கூறி வரைவுகடாதல்’ என்னலாம். அதாவது = முல்லை நிலத்துத் தலைமகளைக் களவொழுக்கத்தாற் கூடிநின்ற தலைமகனை நோக்கித் தோழி ‘இனி நீ இவள் குலத்துக்கு உரிய மரபின்படி வெளிப்படையாக விரைந்து வந்து ஏறு தழுவி இவளை விவாஹம் செய்து கொள்வாயாக’ என்ற வற்புறுத்திக் கூறுதல். முன்பு நப்பின்னையை வரைதற்பொருட்டு நீ ஏறு தழுவினாயென இது கூறியதனால், தோழி தலைவனை ‘இப்பொழுது ஏறுதழுவி இவளை வரைந்து கொள்வாயாக’ எனக் குறிப்பால் ஏறுகோள் கூறி வரைவு கடாயினவாறு. (ஏறுகோள் கூறி – எருதுகளின் வலியை அடக்குமாறு சொல்லி வரைவு கடாதல்- விவாஹம் செய்து கொள்ளச் சொல்லுதல்) ஆகவே இது தோழியின் பாசுரமாகக் கொள்ளலாகும். அன்றியே, நாயகியின் பாசுரமாகவும் கொள்ளலாம்.
English Translation
O Lord in the sky! Even while the celestials there brought fresh garlands, anointed you and offered incense, in a trice by magic did you not come here to stead butter, then dance between the horns of seven bulls for the valiant cowherd-daughter Nappinnai?
