(213)
ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும்
தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.
(214)
குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ
எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு
விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.
(215)
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.
(216)
தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தானால்
இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
(217)
ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது அங்கு
ஆப்புண் டிருந்தானால் இன்று முற்றும் அடியுண் டழுதானால் இன்று முற்றும்.
(218)
தள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய்
உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி
கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.
(219)
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று
மூவடி தாவென்று இரந்தஇம் மண்ணினை
ஓரடி யிட்டுஇரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்.
(220)
தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் அதற்குஅருள் செய்தானால் இன்று முற்றும்.
(221)
வானத் தெழுந்த மழைமுகில் போல்எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்.
(222)
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைப்கோன் பட்டன்சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே.
