எட்டாந் திருமொழி
(1718)
வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1719)
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1720)
பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1721)
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,
விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,
பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,
களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1722)
தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1723)
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1724)
வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1725)
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1726)
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,
இவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
(1727)
மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய் பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும்
ஆனான் றன்னை கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த
தேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே.
