(1044)
மானேய் மடநோக்கி திறத்தெதிர்வந்த *
ஆனேழ் விடைசெற்ற அணிவரைத்தோளா! *
தேனே! திருவேங்கட மாமலை மேய! *
கோனே! என்மனம் குடிகொண்டிருந்தாயே.
பதவுரை
மான் ஏய் மட நோக்கி திறத்து | – | மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக, |
எதிர் வந்த | – | செருக்குடன் வந்த |
ஆன் விடை ஏழ் செற்ற | – | ஏழு ரிஷபங்களைக் கொன்ற |
அணி வரை தோளா | – | அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே |
தேனே | – | தேன்போல் போக்யனானவனே! |
திருவேங்கடம் மா மலை மேய கோனே | – | திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே! |
என் மனம் | – | என்னுடைய நெஞ்சை |
குடிகொண்டு | – | இருப்பிடமாகக்கொண்டு |
இருந்தாய் | – | நிலைபெற்றிரா நின்றாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1044:
மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா!
தேனே! திருவேங்கட மா மலை மேய
கோனே! என் மனம் குடிகொண்டு, இருந்தாயே. [1-10-7]
* * *- [மானேய்மடநோக்கி.] ” அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார். மானினுடைய நோக்குப்போன்ற நோக்கையுடையளான நப்பின்னைப்பிராட்டியை மணந்துகொள்வதற்காக அவளுடைய தந்தையின் கட்டளைப்படி ஏழு ரிஷபங்களையும் கொன்றொழித்த பெருமிடக்கனே!; அன்று அவளுக்கு எவ்வளவு போக்யமாயிருந்தாயோ, எனக்கும் அவ்வளவு போக்யமாயிருப்பவனே! திருவேங்கடமுடையானே! அந்த நப்பின்னைப்பிராட்டியையும் கூட்டிக் கொண்டு என் மனத்தே வந்து குடி கொண்டிருக்கின்றாயே! இப்படியும் ஒரு திருவருளுண்டோ? என்றாராயிற்று.
எதிர் வந்த ஆனேழ்விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைத் தோளா! என்று அந்வயிப்பது. …… ….. …… (7)
English Translation
My Lord, sweet as honey, Resident of the mighty Venkatam hills! For the sake of the fawn-eyed Nappinnai Dame you fought seven fierce bulls, with your strong mountain-like arms! You now reside in my heart.
