(3627)
ஏழையர் ஆவியுண் ணுமிணைக் கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக் கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்! அன்னை மீர்! என்செய் கேந்துய ராட்டியேனே?
(3628)
ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக்கின் சுடராய்நிற்கும் வாலியதே.
(3629)
வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வி னைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே.
(3630)
இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும் இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச் சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான் புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்று நின்றே.
(3631)
என்று நின்றேதிக ழும்செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான் முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை மீர்! எனக் குய்விடமே!
(3632)
உய்விடம் ஏழையர்க் கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம் தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான் திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய் அடுகின்றன காண்மின்களே.
(3633)
காண்மின்கள் அன்னையர் காள்! என்று காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள் பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன் உயிர் கோளிழைத்தே
(3634)
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் ,
கோளிழைத்தண் முத்தமும் தளிரும் குளிர்வான் பிறையும்,
கோளிழையாவுடைய கொழுஞ் சோதி வட்டங்கொல், கண்ணன்,
கோளிழைவாள் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே?
(3635)
கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந் திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை கொல்?அன்று மாயங்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை மீர்! கழறாநிற்றிரே.
(3636)
நிற்றிமுற் றத்துள் என் றுநெரித் தகைய ராயென்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை மீர்! நசை யென்நுங்கட்கே?
(3637)
கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன் சொன்ன,
உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே.
