நான்காந் திருமொழி
(1878)
சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமனே உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே,
(1879)
வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ
செங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா,
கொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன்
எங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே.
(1880)
திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,
உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய்.
(1881)
மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன்
ஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய்.
(1882)
மைத்த கருங்குஞ்சி மைந்தா மாமரு தூடு நடந்தாய்,
வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,
இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகளந் தாய் அம்மம் உண்ணாய்.
(1883)
பிள்ளைய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி
உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற
பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய்.
(1884)
தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க
வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி
நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா
என்மக னே அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.
(1885)
உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன்நுங்கள்தம் ஆநிரை யெல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே வாராய்.
(1886)
பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய்,
சுற்றக் குழாத்திளங் கோவே தோன்றிய தொல்புக ழாளா,
கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே.
(1887)
இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி
செம்மைப் பனுவல்நூல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை
அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்
மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே கலித்தாழிசை.
