(2528)
மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே!
(2529)
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.
(2530)
வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே.
(2531)
வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!
(2532)
வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே?
(2533)
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.
(2534)
புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன்கையால்
மலக்குண்டமுதஞ்சு ரந்த மறிகடல் போன்றவற்றாற்
கலக்குண்டநான்று கண்டார் * எம்மை யாருங்கழறலரே
(2535)
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?
(2536)
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.
(2537)
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
