(275)
நாவ லம்பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள்இதுஓ ரற்புதம் கேளீர்
தூவ லம்புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து எங்கும்
காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே.
(276)
இடவணரை யிடத்தோளொடுசாய்த் திருகைகூடப் புருவம்நெரிந்தே*
குடவயிறுபட வாய்கடைகூடக் கோவிந்தன் குழல்கொடடூதினபோது*
மடமயில்களோடு மான்பிணைபோலே மங்கைமார்கள் மலர்க்கூந்தலவிழ*
உடைநெகிழ வோர்கையால்துகில்பற்றியொல்கி யோடரிக்க ணோடநின்றனரே(உ).
(277)
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசுதே வன்மது ரைமன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்துவந் தீண்டி மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப
தேனள வுசெறி கூந்த லவிழச் சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே.
(278)
தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
கான கம்படி உலாவி யுலாவிக் கருஞ்சிறுக் கன்குழ லூதின போது
மேனகை யொடுதி லோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய்திறப் பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே.
(279)
முன்நர சிங்கம தாகி அவுணன் முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்
மன்னரஞ் சும்மது சூதனன் வாயில் குழலி னோசை செவி யைப்பற்றி வாங்க
நன்ன ரம்புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து
கின்ன ரமிது னங்களும் தம்தம் கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.
(280)
செம்பெ ருந்தடங் கண்ணன்திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன்இந் நாள்குழ லூதக் கேட்டவர் கள்இட ருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீதவலை யால்சுருக் குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே.
(281)
புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப
அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே.
(282)
சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.
(283)
திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான் ஊது கின்றகுழ லோசை வழியே
மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர
இரண்டு பாடும்துலங் காப்புடை பெயரா எழுதுசித் திரங்கள் போல நின்றனவே.
(284)
கருங்கண் தோகைமயிற் பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.
(285)
குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்
குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை
குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்
குழலை வென்றகுளிர் வாயின ராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.
