(283)

(283)

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே

சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான் ஊது கின்றகுழ லோசை வழியே

மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர

இரண்டு பாடும்துலங் காப்புடை பெயரா எழுதுசித் திரங்கள் போல நின்றனவே.

பதவுரை

திரண்டு எழு

திரண்டுமேலெழுந்த
தழை

தழைத்திராநின்ற
மழை முகில்

காளமேகம் போன்ற
வண்ணன்

வடிவுடைய கண்ணபிரான்
செம் கமலம் மலர் சூழ்

செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள
வண்டு இனம் போலே

வண்டுத் திரளைப் போன்று
சுருண்டு இருண்ட

சுருட்சியையும் கறுநிறத்தையுமுடைய
குழ

திருக்குழல்களானவை
தாழ்ந்த

தாழ்ந்து அலையப்பெற்ற
முகத்தான்

முகத்தையுடையவனாய்க் கொண்டு
ஊதுகின்ற

ஊதுகிற
குழல் ஓசை வழியே

குழலின் ஓசையாகிற வழியிலே (அகப்பட்டு)
மான்கணங்கள்

மான் கூட்டங்கள்
மருண்டு

அறிவழிந்து
மேய்கை மறந்து

மேய்ச்சலையும் மறந்து
மேய்ந்த

வாயில் கவ்வின
புல்லும்

புல்லும்
கடைவாய்வழி

கடைவாய் வழியாக
சோர

நழுவிவிழ,
இரண்டு பாடும்

முன் பின்னாகிற இரண்டறாகிலும்
துலுங்கா

(காலை) அசைக்காமலும்
புடை

பக்கங்களில்
பெயரா

அடியைப் பெயர்ந்து இடமாட்டாமலும்
எழுது சித்திரங்கள் போல நின்றன

(சுவரில்) எழுதப்பட்ட சித்திரப் பதுமைபோலத் திகைத்து நின்றன

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் குழலூதும்போது அவனது திருமுகமண்டலத்தின் மேல் திருக்குழல்கள் தாழ்ந்தசைந்தன என்றும், அந்த நிலைமை செந்தமரைப் பூவில் வண்டுகள் படிந்திருப்பதை ஒக்கும் என்றுங் கூறுதல் முன்னடிகளின் கருத்து; “செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோற், பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப”” என்றார் கீழும். முகத்தான் ஊதுகின்ற எனப்பொருள் படுதலால், குறிப்புமுற்று வினையெச்சமாயிற்று; முற்றெச்சம். மனிசர் காட்டு வழியிலகப்பட்டுக் கள்ளர்கையில் அடியுண்டு அறிவழியப்பெறுதல்போல, மான் கணங்கள் இக்குழலோசையாகிற வலைவைத்த வழியிலே அகப்பட்டு ரஸாநுபவபாரவச்யத்தினால் மெய்மறந்து அறிவழிந்து போகவே, புல்மேயமாட்டாதொழிந்துமன்றி, மென்று தின்பதற்காக வாயில் கவ்வியிருந்த புற்களும் உறங்குவான்  வாய்ப்பண்டம்போல் தன்னடையே கடைவாய்வழியாக வெளியில் நழுவிவந்து விழுந்தன; அதுவுமன்றி, நின்ற விடத்தில் நின்றும் ஒரு மயிரிழையளவும் அசையமாட்டாமலுந் திகைத்து நின்றன என்றவாறு, துலுங்கா, புடை பெயரா-ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

English Translation

When the Lord of dark-cloud hue played his flute, with curls falling over his face like bumble bees hovering over a lotus, the music made the herd of deer stop grazing. Even the grazed grass slipped out of their mouth. Not moving this side or that, forward or backward, they stood like pictures on a wall.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top