(282)

(282)

சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க

குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப

கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.

பதவுரை

சிறு விரல்கள் –

(தனது) சிறிய கைவிரல்கள்
தடவி –

(குழலின் துளைகளைத்) தடவிக்கொண்டு
பரிமாற –

(அக்குழலின்மேல்) வியாபரிக்கவும்
செம் கண் –

செந்தாமரை போன்ற கண்கள்
கோட –

வக்ரமாகவும்
செய்ய வாய் –

சிவந்த திருப்பவளம்
கொப்பளிப்ப –

(வாயுவின் பூரிப்பாலே) குமிழ்க்கவும்
குறு வெயர் புருவம் –

குறு வெயர்ப்பரும்பின புருவமானது
கூடலிப்ப –

மேற்கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் கொடு ஊதினபோது

(அக்குழலோசையைக் கேட்ட)

பறவையின் கணங்கள் –

பக்ஷிகளின் கூட்டங்கள்
கூடு துறந்து –

(தம்தம்) கூடுகளை விட்டொழிந்து
வந்து –

(கண்ணனருகில்) வந்து
சூழ்ந்து –

சூழ்ந்துகொண்டு
படு காடு கிடப்ப –

வெட்டி விழுந்த காடுபோலே மெய்மறந்து கிடக்க
கறவையின் கணங்கள் –

பசுக்களின் திரள்
கால் பரப்பிட்டு –

கால்களைப் பரப்பி
கவிழ்ந்து இறங்கி –

தலைகளை நன்றாக தொங்கவிட்டுக்கொண்டு
செவி ஆட்ட கில்லா –

காதுகளை அசைக்கவும் மாட்டாதே நின்றன.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-குழலுதும்போது குழலின் துளைகளில் புதைக்கவேண்டுவது புதைத்துத் திறக்கவேண்டுவது திறக்கைகாக அவற்றைக் கைவிரல்களால் தடவுதலும், கண்கள் ஓர் வகையாக மேல் நோக்கி வக்கரித்தலும், இரண்டு கடைவாயையும் குவித்துக்கொண்டு ஊதுகிறபோது வாயினுள் உள்ள வாயுவின் பூரிப்பாலே வாய்குமிழ்த்து தோற்றுதலும், புருவங்கள் மேற்கிளர்ந்து வளைதலும் குழலூதுவார்க்கு இன்றியமையாத இயல்பாதல் அறிக. இவ்வாறான நிலைமையோடு கண்ணபிரான் குழலூத, அதன் ஓசையைக்கேட்ட பறவைகள் தாமிருக்குங் கூடுகளை விட்டிட்டோடிவந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்கள் போல் ஆடாது அசையாது நிலத்தினில் விழுந்து கிடந்தன; அங்ஙனமே பல பசுக்கூட்டங்களும் மெய்மறந்து கால்களைப் பரப்பிக்கொண்டும் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டும் சைதந்யமற்ற வஸ்துபோலத் திகைத்து நின்றன; என்றனவே, உயர்திணைப்பொருள்களோடு அஃறினைப் பொருள்களோடு வாசியற எல்லாப்பொருள்களும் ஈடுபட்டுமயங்குமாறு கண்ணபிரான் குழலூதினானென்கை. கோட-”கோட்டம் வணமேவளாவல் வளைதல்” என்ற நிகண்டு காண்க. கொப்பளிப்பு – ”குமிழ்ப்புறுவடிவே கொப்பளித்தல்பேர்.” -குறுவெயர்=குறுமை-சிறுமை;சிறிய முகத்தின் அளவாக ஸ்வேதமுண்டாதல். உலாவியுலாவிக் குழலூதுகிற ஆயாஸம்பொறாமல் மென்மையாலே புருவம் குறுவெயர்ப் பரும்பினபடி. பறப்பது – பறவை. கறப்பது-கறவை. படுகாடு=படுதல்-அழிதல்; காடு என்ற சொல் இலக்கணையால் மரங்களை உணர்த்தும் இங்கு. அழிந்த மரம்- வெட்டப்பட்டு வீழ்ந்த மரமென்க. காடு கிடப்ப – காடுபோலக் கிடப்ப என்றபடி; உவமவுருபு. தொக்கிக்கிடக்கிறது. கறவைகள் இயற்கையாகப் புல்மேய்ந்துகொண்டுசெல்லும்போது இக்குழலோசை செவியிற்பட்டு மயங்கினமையால் நின்றபடியே திகைத்தமைபற்றிக் கால்பரப்பிட்டு என்றார்; பசுக்கள் மெதுவாக நடக்கும்போது கால்பரப்பிட்டு நடத்தல் இயல்பாதல் காண்க. கால்பரப்பியிட்டு என்றபடி; தொகுத்தல் விகாரம். கவிழ்ந்து இறங்கி-ஒருபொருட்பன்மொழி. காதுகளை அசைக்கில் இசைகேட்கைக்குத் தடையாமென்று செவியாட்டாதொழிந்தன வென்க.

English Translation

His little fingers ran over the holes, his red eyes titled, his red lips formed like a bud, little beads of sweat formed over his raised eyebrows. When Govinda brought his flute and played on it, flocks of birds left their nests and fell like broken twigs all around. All the cows spread their legs and stood with lowered heads and motionless ears.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top