(371)
ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி அன்னை அத்தன்என் புத்திரர் பூமி
வாச வார்குழ லாளென்று மயங்கி மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே
கேச வாபுரு டோத்தமா என்றும் கேழ லாகிய கேடிலீ என்றும்
பேசு வாரவர் எய்தும் பெருமை பேசு வான்புகில் நம்பர மன்றே.
(372)
சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்
வாயி னால்நமோ நாரணா வென்று மத்த கத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக்கொ டுக்கிலும் போகவொட் டாரே.
(373)
சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
(374)
மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல்மி டற்றினை உள்ளெழவாங்கி
காலுங் கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்
மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதி ராகில் விண்ண கத்தினில் மேவலு மாமே.
(375)
மடிவ ழிவந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவ ழிவாரக் கண்ட மடைப்பக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்
தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா சூலத் தால்உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவ ழியில்நீர் கூறையும் இழவீர் இருடீ கேசனென் றேத்தவல் லீரே.
(376)
அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டுல வும்கடற் பள்ளி மாய னைமது சூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்குஎன்றும் சாதிக்க லாமே.
(377)
தென்ன வன்தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப் பின்முன் னாக இழுப்பதன் முன்னம்
இன்ன வன்இனை யானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி
மன்ன வன்மது சூதன னென்பார் வான கத்துமன் றாடிகள் தாமே.
(378)
கூடிக் கூடிஉற் றார்கள் இருந்து குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து
பாடிப் பாடிஓர் பாடையி லிட்டு நரிப்ப டைக்குஒரு பாகுடம் போலே
கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்து வமுடைக் கோவிந்த னோடு
கூடி யாடிய உள்ளத்த ரானால் குறிப்பி டம்கடந் துஉய்யலு மாமே.
(379)
வாயொ ருபக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற
தாய்ஒ ருபக்கம் தந்தைஒரு பக்கம் தார மும்ஒரு பக்கம் அலற்ற
தீஓ ருபக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற
மாய்ஒ ருபக்கம் நிற்கவல் லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
(380)
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல்
பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப் பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன்
சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச் செய்த மாலை இவைபத்தும் வல்லார்
சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.
