(318)
நெறிந்தகருங் குழல்மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்தமணி முடிச்சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது
அறிந்துஅரசு களைகட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க
செறிந்தசிலை கொடுதவத்தைச் சிதைத்ததும்ஓ ரடையாளம்.
(319)
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே
எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்
மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.
(320)
கலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போஎன்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னொடும்அங்கு ஏகியதுஓ ரடையாளம்.
(321)
வாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்
சீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்.
(322)
மானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.
(323)
சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.
(324)
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக
பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும்ஓ ரடையாளம்.
(325)
மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட
அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.
(326)
திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்
மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.
(327)
வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.
