(463)
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே.
(464)
பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின்
பிறவியென்னும் கடலும்வற்றிப் பெரும்பத மாகின்றதால்
இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
(465)
எம்மனாஎன் குலதெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்
நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
(466)
கடல்கடைந்து அமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்
உடலுருகி வாய்திறந்து மடுத்துஉன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும் கூற்றமும்என் கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்கரபாணீ சார்ங்கவிற் சேவகனே.
(467)
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பாஎன் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.
(468)
உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழி யாமல்எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பீ
என்னிடைவந்து எம்பெருமான் இனியெங்குப் போகின்றதே.
(469)
பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல்
திருப்பொலிந்த சேவடிஎஞ் சென்னியின் மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன் வாசகமே
உருப்பொலிந்த நாவினேனை உனக்குஉரித் தாக்கினையே.
(470)
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன்
மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்
நினைந்துஎன்னுள் ளேநின்று நெக்குக்கண்கள் அசும்பொழுக
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன் நேமி நெடியவனே.
(471)
பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று
உனக்கிடமா யிருக்கஎன்னை உனக்குஉரித் தாக்கினையே.
(472)
தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ
வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே.
(473)
வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித் தன்மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்த மமுதத்தினை
சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.