நான்காந் திருமொழி
(3154)
புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ *
திகழுந்தண்பரவையென்கோ தீயென்கோவாயுவென்கோ*
நிகழுமாகசமென்கோ நீள்சுடரிரண்டு மென்கோ*
இகழ்விலிவ்வனைத்துமென்கே கண்ணனைக்கூவுமாறே.
(3155)
கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.
(3156)
பங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ சாதிமா ணிக்கத் தையே.
(3157)
சாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.
(3158)
அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.
(3159)
பாலென்கோ நான்குவேதப்பயனென்கோ* சமயநீதி
நூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ * இவற்றுள்நல்ல
மேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ * சண்ணனென்கோ
மாலென்கோமாயனென்கோ வானவராதியையே.
(3160)
வானவராதியென்கோ வானவர்தெய்வமென்கோ*
வானவர்போகமென்கோ வானவர்முற்றுமென்கோ*
ஊனமில்செல்வமென்கோ ஊனமில்சுவர்க்கமென்கோ*
ஊனமில்மோக்கமென்கோ ஒளிமணிவண்ணனையே
(3161)
ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.
(3162)
கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.
(3163)
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.
(3164)
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே
