(3157)

(3157)

சாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,

சாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,

ஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,

ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.

 

பதவுரை

ஆதும் இல் காலத்து

(என்னிடத்து) யாதொரு உபாயமுமில்லாத காலத்திலே

எந்தை

என் தந்தையைப்போலப் பாதுகாக்க ஒருப்பட்டவனும்

அச்சுதன்

(பின்பு ஒருகாலும் என்னை அந்த நிலையினின்று) நழுவ விடாதவனும்

அமலனை

(அங்ஙனம் பாதகாத்தலைத்) தன் பேறாகக் கொள்பவனுமான எம்பெருமானை

சாதி மாணிக்கம் என்கோ

 

சவிகொள் பொன் என்கோ

ஒளியையுடைய பொன் என்பேனோ?

சவிகொள் முத்தம் என்கோ

நீரோட்டமுள்ள முத்து

என்பேனோ?

சாதிநல்வயிரம் என்கோ

சாதியில் தோன்றிய சிறந்த வஜ்ரரத்னமென்பேனோ?

தவிவு இல் சீர் விளக்கம் என்கோ

அழிதலில்லாத ஒளியையுடைய விளக்கு என்பேனோ?

ஆதி

எல்லாப் பொருள்கட்கும் முந்தியிருப்பதாய்

அம்

அழகியதான

சோதி என்கோ

தேஜோமயமான திருமேனியையுடையவனென்பேனோ?

ஆதி

தலைவனாகிய

அம்

(ஆனந்தம் முதலிய குணங்களால்) இனியவனான

புருடன் என்கோ பரமபுருஷன் என்பேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஒருவன் எம்பெருமானை நினைப்பதற்கு எனக்கு ஒருபாயம் சொல்ல வேணும் என்று ஒரு பெரியோரைக் கேட்க, அதற்கு அவர் ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன். நீ எனக்கு அவனை மறப்பதற்கு ஒருபாயம் சொல்லவல்லையோ?’ என்றாராம். அதற்குக் கருத்து – உலகத்துப் பொருள்கள் யாவும் பெயரையும் உருவத்தையும் பெற்று வழங்கப்பெறுவது எம்பெருமான் அவ்வப்பொருளில் பிரவேசித்து நிற்பதனாலேயாதலால், ஏதேனும் ஒரு பதார்த்தம் தோற்றும்போதும் ஞானிகட்கு அவனை முன்னிட்டுக்கொண்டே தோற்றுமென்பது. இவ்வாறு எல்லாப் பொருள்களும் எம்பெருமானது ஸம்பந்தத்தைப் பெற்றிருந்தாலும் *யத் யத் விபூதி மத்..* (உலகத்திலே சிறந்து தோன்றும் பொருள்கள் யாவும் எனது தேஜஸ்ஸின் அம்சத்தினாலுண்டானவை) என்று கீதையில்  கண்ணபிரான் பாராட்டிக் கூறியித்தலால் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக்கிருக்குமென்பது கருதி ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் எம்பெருமானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி யநுபவிக்கின்றனரென்க. ஆதியஞ்சோதி யென்பது முதல் எம்பெருமானை நேரே சொல்லுகின்றது.

மாணிக்கம் – நவமணிகளுள் ஒன்று. (நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.) சாதி மாணிக்கம் என்றது சிறந்த ஆகரத்திற் பிறந்ததும் குற்றமற்றதும் இயற்கையழகையுடையதும் பெருவிலையதுமான மாணிக்கம் என்றபடி. (சவிகொள்பொன்முத்தம் என்கோ) சவிகொள் பொன் என்கோ, சவிகொள் முத்தம் என்கோ என்று கூட்டுக. சவி-வடசொல்விகாரம். பொன்னுக்குச் சவி உயர்ந்தமாற்று. முத்தத்திற்குச் சவி நீரோட்டம்.

ஆதியஞ்சோதி என்பதற்கு – காரியப்பொருள்கட்கெல்லாம் தான் முந்தியதாய், என்றும் ஒருபடிப்பட்டதாய், ஸூர்யன் சுடர்களெல்லாவற்றிலும் விஞ்சிய ஒளியையுடையதான பரமபதம் என்றும் பொருள் கூறலாம். (அம்புருடன்) புருஷனுக்கு அழகாவது -உலகத்து உயிர்களைப்போலக் கருமவசத்தினால் தோன்றி க்ஷணிகமான நிற்கும் ஆனந்தம் முதலிய குணங்களையுடையவனாகாமல் இயற்கையாகவே எப்போதும் இருப்பனவனா ஆனந்தம் முதலிய குணங்களுடையவனாதல்.

(“ஆதுமில்காலத்து எந்தை அச்சுதனமலனையே.) எனக்குத் தன்னைப்பெறுகைக்கு முதலொன்றுமில்லாத காலத்திலே தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒருகாலமும் நழுவவிடாதே ரக்ஷித்து என்பக்கலிலே ஒரு ப்ரயோஜனங் கொண்டன்றிக்கே நிர்வேஹதுகமாகத் தன் பேறாக ரக்ஷித்தவனை” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. இனி, ஆதும் இல்காலத்து-எல்லாம் அழியும் ப்ரளயகாலத்திலே, எந்தை-எமது தந்தைபோல்பவனாய், அச்சுதன் – (எல்லாப்பொருள்களையும்) நழுவவிடாது (தன்பக்கல் ஏறிட்டுக்கொண்டு) பாதுகாப்பவனாய், அமலனை – (அவை தன்னிடத்திலிருந்தாலும் அவற்றின்) குற்றம் தன்னிடத்துச் சேரப்பெறாதவனான எம்பெருமானை என்றும் பொருளுரைப்பர். ஆசார்யஹ்ருதயத்தில் – “உறக்கம் தலைக்கொண்ட பின்னை” இத்யாதியான (46) சூர்ணையில் “ஆதுமில்காலத்தெந்தையான” என்றவிடத்திற்கு வியாக்கியானம் செய்தருளா நின்ற மணவாளமாமுனிகளும் இங்ஙனே பொருளருளிச் செய்துள்ளார்.

 

English Translation

My faultless Lord was there, when all else was naught, Shall I call him my flawless gem, or dazzling gold and pearls? or a brilliant diamond? or a lamp of eternal glory?, or radiant first-cause, the good first-person?

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top