(2868)
கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.
(2869)
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே.
(2870)
நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.
(2871)
சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனியுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.
(2872)
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.
(2873)
சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டுகொள்ளே.
(2874)
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று
உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.
(2875)
ஓதிய வேதத்தின் உட்பொருளாய், அதன் உச்சிமிக்க
சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.
(2876)
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.
(2877)
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே.
(2878)
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.