மூன்றாந் திருமொழி
(968)
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.
(969)
முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
(970)
உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டு பண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
(971)
பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே.
(972)
பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே.
(973)
எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்*
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்*
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த*
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே.
(974)
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர் மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும் நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.
(975)
ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே.
(976)
புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே.
(977)
வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே.
