ஆறாந் திருமொழி
(1898)
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா யுலகத் தறநூல்
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
(1899)
குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,
(1900)
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,
வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1901)
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் சரணாய் முரணா யவனை உகிரால்
பிளந்திட் டமரர்க் கருள்செய் துகந்த பெருமான் திருமால் விரிநீ ருலகை,
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
(1902)
நீண்டான் குறளாய் நெடுவா னளவும் அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,
தீண்டா மைநினைந் திமையோ ரளவும் செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,
வேண்டா மைநமன் றமரென் தமரை வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1903)
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல பெருமான் திருமா லதுவன் றியும்முன்,
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் சினத்தோள் அவையா யிரமும் மழுவால்
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1904)
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் தெளியா அரக்கர் திறலபோய் அவிய,
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை
அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1905)
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ டுடனாய வில்லென்ன வல்லே யதனை,
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1906)
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் இருகூறு செய்த பெருமான் முனநாள்
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
(1907)
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே.
