முதல் திருமொழி
(1248)
போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.
(1249)
யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.
(1250)
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
(1251)
இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
(1252)
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
(1253)
ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.
(1254)
ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.
(1255)
வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
(1256)
கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ
கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.
(1257)
காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே.
