முதல் திருமொழி
(1648)
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால்,
மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால்,
முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால்,
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1649)
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால்,
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால்,
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1650)
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1651)
தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1652)
அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1653)
பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால்,
ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால்,
நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1654)
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1655)
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால்,
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால்,
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1656)
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால்,
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால்,
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
(1657)
மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே.
