(3247)

(3247)

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,

ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,

பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே

ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே

 

பதவுரை

மா மாதர்

சிறந்த அழகுடைய

மண் மடந்தை பொருட்டு

பூமிப் பிராட்டிக்காக

ஆதி அம் காலத்து

முன்னொரு காலத்தில்

எனம் ஆய்

வராஹ மூர்த்தியாய்

அகல் இடம்

விபுலமான பூமண்டலத்தை

கீண்டவர்

பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய

பாதங்கள்மேல்

திருவடிகளின்மீது

அணி

சாத்தின

பைம் பொன் துழாய் என்றே

மிகவழகிய திருத்துழாயென்றே

ஓதும் மால்

ஓதும்படியான வியாமோஹத்தை

என் தன் மடந்தை

எனது பெண் பிள்ளை

எய்தினள்

அடைந்தாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.

“ஆதிகாலத்து” என்னாமல் “ஆதியங்காலத்து”; என்றதற்கு நம்பிள்ளை தாற்பரியமருளிச் செய்கிறார்-“ரக்ஷகனானவன்  தன் விபூதிரக்ஷணத்துக்காகக் கொண்ட கோலத்தை அநுபவிக்கிற காலமாகையாலே அழகிய காலமென்கிறார்” என்று.

“அகலிடங்கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாய்”

என்கிறாரே; அகலிடங்கீண்டபோது திருவடிகளில் திருத்துழாய் அணியப் பெற்றதுண்டோ வென்னில், உண்டு. “உத்திஷ்டதஸ் தஸ்ய ஜலார்த்ரகுக்ஷே: மஹாவராஹஸ்ய மஹீம் ப்ரக்ருஹ்ய, விதுர்ந்வதோ வேதமயம் சரீரம் ரோமாந்தரஸ்தா முநய: ஸ்வாந்தி.” என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (1-4-29) கூறப்பட்டிருத்தலால் அப்போதும் ஸநகாதி மஹர்ஷிகள் இட்ட திருத்துழாய் உண்டு என்றுணர்க.  மேற்காட்டிய ச்லோகத்தில் “ஸ்துவந்தி” என்று ஸ்துதியைச் சொல்லியிருப்பது புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பணத்திற்கும் உபலக்ஷணமாகும்.

இப்பதிகத்தில் பெரும்பாலும் பாசுரந்தோறும் “மாலுமால்” “கூவுமால்” “ஓதுமால்” “மடங்குமால்” “நம்புமால்” என்றிங்ஙனே வருகின்றது; இச்சொற்றொடர்களில் ;ஆல் என்பது அசையாகும்.  இப்பாசுரத்தில் மாத்திரம் ஓதுமால் என்ற சொற்றொடரில் ஆல என்று இல்லை; ‘ஓதும் மால்’ என்று பிரியும்; ஓதும்படியான பைத்தியத்தை யடைந்தாளென்றபடி.

மடந்தை-மகளிர் பருவம் எழனுள் பதினான்குமுதல் பத்தொன்பது வயது வரையுள்ள பருவத்துப் பெண்; இச்சொல் பெண் பொதுப்பெயராகவே பெரும்பாலும்  வழங்கும்.

 

English Translation

my daughter has become made repeating her desire for the golden Tulasi on the feet of the Lord, -who took the form of a boar in the beginning of creation, and lifted beautiful Earth-dame from deluge waters

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top