(234)

(234)

அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை

மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே

கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்

என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

அஞ்சனம் வண்ணனை

மைபோன்ற நிறத்தையுடையனும்
ஆயர் கோலம்

இடைக்கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை

(அவ்விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை

(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்

(தன்வீட்டிற் போலவே) அயல்வீடுகள் தோறும்
திரியாமே

(இஷ்டப்படி) திரியவொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி

(காலையில் குள்ளக்குளிர) நீராட்டி,
கஞ்சனை

கம்ஸனை
காய்ந்த

சீறியுதைத்த
கழல்

வீரக்கழலை அணிந்துள்ள
அடி

திருவடிகள்
நோவ

நோம்படியாக
கன்றின்பின்

கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போவென்று)
என் செய போக்கினேன்

ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே

மஹாபாபம்! மஹாபாபம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆயர்கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகியகொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்; வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்துபோலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவுவந்தால் முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படியிருத்தலால் கொழுந்தெனப்பட்டான். “மஞ்சனமாட்டி”  என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும். கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய பாவியேனுடைய பாவநினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள். கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.

English Translation

My dark hued Lord and master of the cowherd clan would have his bath, then go roaming from house to house. Instead I sent the child after the calves, hurting those tender feet that smote Kamsa. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top