(942)
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன்புக ழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.
பதவுரை
| இன்று தொட்டும் |
– |
இன்றுமுதலாக |
| எழுமையும் |
– |
மேலுள்ள காலமெல்லாம் |
| நின்று |
– |
(நான்) அத்யவஸாயம் நிலைக்கப்பெற்று |
| தன் புகழ் |
– |
தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை |
| ஏத்த |
– |
துதிக்கும்படி |
| எம் பிரான் அருளினான் |
– |
எம்ஸ்வாமியான ஆழ்வார் க்ருபைபண்ணினார்; |
| குன்றம் மாடம் |
– |
மலைபோன்ற மாடங்களையுடைய |
| திருகுருகூர் நம்பி |
– |
திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார் |
| என்றும் |
– |
(இனி) எக்காலத்திலும் |
| என்னை |
– |
என் விஷயத்தில் |
| இகழ்வு இவன் |
– |
அநாதரமுடையவராக இருக்கமாட்டார்; |
| காண்மின் |
– |
(இதனை அநுபவத்தில்) கண்டுகொள்ளுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி ‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க, இன்றுமுதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்யகுணங்களையே நான் பாடித் திரியும்படி அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப்பெற்றேன்; இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழமாட்டாரென்னும்படி அவ்வளவு பரமகிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.
பகவத் விஷயத்தை ஆஸ்ரயிப்பது ஒருகாலமும், பலன் கைகூடுவது வேறொரு காலமுமாயிருக்கும்; அதுபோலன்றியே ஆழ்வாரை அஸ்ரயித்த இன்றுமுதலாகவே எனக்குப் பலன் கைகூடிற்றுக் காண்மின் என்பார் இன்றுதொட்டும் என்கிறார். எழுமையும்-ஏழு ஜந்மங்களிலும் என்றது உபலக்ஷணமாய் மேலுள்ள காலமெல்லாம் என்றபடி. இகழ்விலன்-இனி நான் வேறொருவரைத் தேடி ஓடும்படி என்னை இனி எக்காலத்திலும் ஆழ்வார் கைவிடமாட்டார் என்கை. காண்மினே-இது ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடியதாயிருக்க ஆழ்வார் பெருமையை நான் சொல்லக் கேட்கை மிகையன்றோ?
English Translation
The Kurugur mansioned city’s king has made me sing his praise by rote. Henceforth through seven lives, He shall never fail me, note!
