(3154)

(3154)

புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ *

திகழுந்தண்பரவையென்கோ தீயென்கோவாயுவென்கோ*

நிகழுமாகசமென்கோ நீள்சுடரிரண்டு மென்கோ*

இகழ்விலிவ்வனைத்துமென்கே கண்ணனைக்கூவுமாறே.

 

பதவுரை

கண்ணனை

(உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை

புகழும்

(வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற

நல்

விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய

ஒருவன்

ஒப்பற்றவன்

என்கோ

என்று சொல்வேனோ?

பொருவு இல் சீர்

ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய

பூமி என்கோ

பூமியென்று சொல்வேனோ?

திகழும்

விளங்குகிற

பரவை என்கோ

நீர்நிலையென்று சொல்வேனோ?

தீ என்கோ

அக்கினியென்பேனோ?

வாய் என்கோ

காற்று என்பேனோ?

நிகழும் ஆகாசம் என்கோ

எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ?

நீள்சுடர் இரண்டும் என்கோ

(ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ?

இகழ்வு இல்

இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய)

இவ் இனைத்தும் என்கோ

இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ?

கூவும் ஆறு ஏ

(எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமான் ப்ரபஞ்சஸ்ருஷ்டிக்குக் காரணமான பஞ்சமஹாபூதங்களையும்-, அந்த பூதங்களினால் இயன்ற பொருள்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு விலக்ஷணமான குணங்களோடு ஆழ்வார்க்கு ஸேவைதந்தருளியதனால், அத்தகைய நிலைமையை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை இப்படிப்பட்ட தன்மையுடையவனென்று கூறுதற்கு இயலாமல் திகைத்து நிற்கின்றார். “கண்ணனைக் கூவுமாயே” என்ற  முடிக்குஞ்சொல் இன்றி விட்டிருக்கிறார்; அதனை வருவித்து உரைத்துக்கொள்க. விதமென்றபொருளையுணர்த்துகின்ற ஆறு என்ற சொல்வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை இலக்கியங்களிற் காணலாம்: இது இசையெச்சம்.

புகழும் நல்லொருவன் = வேதம் முதலியவற்றால் புகழப்பெற்றும், சேதநாசேதனங்களைக் காட்டிலும் பரமவிலக்ஷணனாகியும் தோன்றும் ஒப்பற்ற எம்பெருமான் என்றபடி. என்கோ என்பதை என்கு ஒ என்று பிரிக்க. ‘என்’ என்னும் பகுதி யினடியாப்பிறந்த தன்மையொருமை எதிர்கால வினைமுற்று ‘என்கு’ என்பது. இதில் ‘கு’ விகுதி காலத்தையும் இடத்தையும் காட்டும். (நன்னூல் பதவியலில் பதினெட்டாவது சூத்திரமும் வினையியலில் பன்னிரண்டாவது சூத்திரமும் காண்க). என்கோ என்பவற்றிலுள்ள ஓகாரங்கள் ஸந்தேகப் பொருளில் வந்தவை.

ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களையும் இப்பாட்டில் உத்பத்திக்ரமேண கூறாமல் மஹாப்ரளய காலத்தில் லயிக்கும் முறைப்படி கூறியுள்ளார். பொறுமை முதலிய குணங்களையுடைய பூமியாகவும், அந்தப் பூமியைக் கொண்டு காரியங்கொள்ளும்போது அதனுடைய கடினத்தன்மையை நெகிழ்ந்துக் கொள்ளுதற்கு  உரிய ஜலமாகவும், அந்த ஜலம் நிறைந்த நெகிழ்ச்சி மிகுந்தால் அந்த நெகிழ்ச்சியை நீக்கி வலிக்கபண்ணித்தரும் அக்நியாகவும், அந்த அக்நி மிகவும் உறைதலால் அதனைத் தணித்தற்கு உரிய காற்றாகவும், இந்த நான்கு பூதங்களும் தங்குவதற்கு இடத்தைத் தருகின்ற ஆகாசமாகவும் இவ்வாறு லோக ஸ்ருஷ்டிக்குக் காரணமான இந்த ஐம்பெரும் பூதங்களையும் எம்பெருமான் தனக்குச் சரீரமாகக் கொண்டு பற்றும் வகையை முதலிற் கூறினார்- “பொருளிவில்சீர்பூமியென்கோ” என்று தொடங்கி “ஆகாசமென்கோ” என்னமளவாக.

“நீள்சுடரிரண்டுமென்கோ” என்று ஸூர்யசந்திரர்களைக் கூறியது- பஞ்ச பூதங்களினாலாகிய மற்றை உலகத்துக் பொருள்கட்கெல்லாம் உபலக்ஷணம். இங்குக் கூறிய பூமி முதலிய பொருள்கள் யாவும் நாட்டிலுள்ளார்க்குத் தோன்றுவதுபோல் வெறும் பொருள்மாத்திரமாகத் தோன்றாது எம்பெருமான் வடிவமாகவே இவ்வாழ்வார்க்குத் தோன்றுகின்றதனால் ஒன்றையும் ஹேயமாகக் கொள்ளாமல் ததீயத்ஸகாரத்தாலே அனைத்தையும் உபாதேயமாகவே ஆழ்வார் கொண்டார் என்பது “இகழ்வு இல் இவ்வனைத்துமென்கோ” என்பதனால் பெறப்படும். அசார்யஹ்ருதயத்தில் (இரண்டாம் பிரகரணத்தின் முடிவான சூர்ணையில் “மதியமென்னில் விட்டகலயும் ததீயமென்னில் இகழ்வு அறவும்” என்றருளிச் செய்திருப்பது இங்கு நினைக்கத்தக்கது.

பூமியானது எம்பெருமானது திருவடிகளில் தோன்றிய சிறப்பையுடையதும், பொறுமை முதலியவற்றையுடையதுமாதலால் “பொருளில் சீர்ப் பூமி” என்றும், ஜகமானது பூமியின் வன்மையை நெகிழ்ச்சித்தரும் தன்மையையுடையதாதலால் “திகழும் பரவை” என்றும், ஆகாசமானது மற்ற நான்கு பூதங்களும் தன்பக்கல் ஒடுங்குமளவும தான் அழியாது நிற்றலாலும், மற்றைப் பூதங்கட்கு முன்னே தோன்றி அவை தன்னிடத்துத் தங்கும்படி தான் இடங்கொடுத்தலாலும் “நிகழும் ஆகாசம்” என்றும் கூறினார் என்றம் விசேஷார்த்தமருளிச்செய்வர்.

 

English Translation

O, How shall I address my Krishna, -as one worthy of worship?  As peerless good Earth, or as the wide cool ocean? Or as Fire, or wind or expansive Space?  Or as the Sun, the Moon or the Universe pervading all?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top