(2610)

(2610)

யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்

கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்

இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,

அருளென்னும் தண்டால் அடித்து.

 

பதவுரை

ஓர்  இருள் தான் அன்ன மாமேனி

இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய

எம் இறையார்

எம்பெருமான்

தந்த

அளித்த

அருள் என்னும் தண்டால்

க்ருபையாகிற ஒரு தடியினாலே

வல்வினையை

கொடிய பாவங்களை

அடித்து

புடைத்து,

கானும் மலையும் புக

(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக

கடிவான்

தூரத்துவதற்கு

யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்

நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (யானுமென்னெஞ்சும்.) கீழ்ப்பாட்டில் “யான் வன்துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச்செய்தார்; ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன்துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமானதல்லவென்றும் தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்லவேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி, கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.

ஓரிருளன்னமாமேனி யெம்மிறையா தான் தந்த அருளென்னுந் தண்டால் வல்வினையை அடித்துக் கானும் மலையும் புகக்கடிவான் யானும் என்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்- என்று அந்வயம். எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினால் என் பாவங்களைத் தொலைக்கத் தொடங்கினபோது அடியேனும் அடியேனுடைய நெஞ்சும் அக்காரியத்திற்கு உடன்பட்டிருந்தோமத்தனை; நான் செய்த காரியம் வேறொன்றுமில்லை என்கிறார்.

இருளன்னமாமேனி என்றது- கண்டவர்கள் நெஞ்சைக் குளிரச் செய்யவல்ல ச்ரமஹரமான திருமேனியென்றபடி. அப்படிப் பட்ட தனது திருமேனியைக் காட்டினபோதே பாவங்கள் அஞ்சி ஓடத்தொடங்கினபோலும். உலகத்தில் ஒருவனை அடித்துத் துரத்த வேண்டில் கொம்பு தடி முதலியன இன்றியமையாதனவாதலால், இவ்விடத்தில் பாவங்களைத் துரத்தித் தள்ளுவதற்கு எம் பெருமானுடைய திருவருளாகிற தடி ஸாதனமாயிற்றென்றார். “நீ பணித்தவருளென்னு மொள்வாளுருவி யெறிந்தேன்” (பெரிய திருமொழி, 6-2-4) என்ற திருமங்கையாழ்வா ரருளிச்செயல் இங்கு ஸம்மரிக்கத்தகும்.

“வல்வினையைக் காணும் மலையும் புகக் கடிவான்” என்றவிடத்து ஒரு ஆக்ஷேபம் தோன்றும்; வல்வினையென்பது உருத்தெரியக்கூடிய ஒரு வஸ்துவல்லவே; எம்பெருமானுடைய அநுக்ரஹமே புண்யமென்றும், அவனுடைய நிக்ரஹமே பாபமென்றுமன்றோ சொல்லப்படுகிறது. ஆகவே பாபமென்பது உருத்தெரியாத அத்ருஷ்ட ரூபமான ஒரு வஸ்துவென்று தேறுகிறது. இப்படிப்பட்ட பாபத்தைத் தண்டாலடித்துக் காடுகளிலும் மலைகளிலும் ஓடிப்போய்விடும்படி துரத்துவதென்பது பொருந்தாத பேச்சாயிருக்கின்றதே! என்று சங்கிக்கக்கூடும். எம்பெருமானுடைய நிக்ரஹம் ஒழிந்துவிட்டது என்று சொல்லவேண்டியதை இப்படி சமத்காரமாகப் பேசுவார்கள். கவிகள் என்று தெளிக. பெரியாழ்வாரும் “நெய்க்குடத்தைப்பற்றி” என்கிற திருமொழியிலே இங்ஙனம் பன்னியுரைத்தா ரென்றுணர்க.

“யானும் என்னெஞ்சுமிசைத் தொழிந்தோம் = அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றி மேல்விழுந்து வந்தபோதுநான் இறாய்த்துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணியிருந்தேனென்கை.

 

English Translation

My Lord, a huge form of darkness, has given us a staff called grace.  My heart and I have agreed to use it to drive away evil Karmas into the forest and mountains.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top