(2605)
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.
(2606)
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,
வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
(2607)
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
(2608)
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
(2609)
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
(2610)
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.
(2611)
அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று.
(2612)
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.
(2613)
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
(2614)
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
