(2507)

(2507)

அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன்

முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ

டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்

இன்னஞ்செல் லீரோ இதுவோ தகவென் றிசைமின்களே .

பதவுரை

அன்னம் செல்வீரும்

(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்

(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்

யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்

(என்னவென்று எனில்;)

முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ

உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு

கிருஷ்ணவதாரஞ் செய்தளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்

(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி

(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ

அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ

இது தகுதியோ?
என்று இசைமின்கள்

என்று சொல்லுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனைப் பிரிந்த நாயகி அன்னங்களையும் வண்டானங்களையும் தூது வேண்டுகின்றாள். எம்பெருமானிடம் தூது செல்லப் பிரார்த்திப்பதன்று; தன்னை யகன்று நாயகன் பின்சென்ற நெஞ்சின் பக்கல் தூது விடுவதாம். நெஞ்சானது தன்னை விட்டுப் பிரிந்து சென்றதாகவும் அதற்குத் தூது விடுவதற்காகவுஞ் சொல்லுகிறவிது ஒருவகையான சமத்காரமாகும். தலைவனிடத்திலேயே நெஞ்சு நன்றாகப் பதிந்துவிட்டது என்பது இதனால் விளங்கும். “நீரிருக்க மடமங்கை மீர்! கிளிகன் தாமிருக்க மதுகர மெலாம் நிறைந்திருகுக மடவண்ணமுன்ன நிரையாயிருக்க வுரையாமல் யான், ஆரிருக்கிலுமென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லை யென்றாதரத்தினோடு தூது விட்ட பிழை யாரிடத்துரை செய்தாறுவேன் சீரிருக்கு மறை முடிவு தேடரிய திருவாங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பியே கொடு திரும்பியே வருகலின்றியே, வாரிருக்கு முலைமலர் மடந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கிபின்புற முயங்கி யென்னையு மறந்து தன்னையு மறந்ததே” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுள் இங்கு ஸமரிக்கத்தக்கது.

வண்டானம் என்பது நாரையில் ஒரு சாதி; அன்னப் பறவைகளும் வண்டானங்களும் இயற்கையாக வானத்திற் பறந்து திரிந்து கொண்டிருந்தன; வானத்திற் பறப்பவை யெல்லாம் எம்பெருமானைத் தொழுவதற்கு விண்ணுலகம் நோக்கிச்செல்லுகின்றன என்பது இவ்வாழ்வாரது நினைவு போலும்; அதனால் ஓ பறவைகாள்! உங்களைத் தலையால் வணங்கி வேண்டிக் கொள்கின்றேன்; நீங்கள் மிக விரைந்து செல்லுகின்றீர்கள்; உங்களில் முந்துற முன்னம் விண்ணுலகத்துச் சென்று சேருமவர் எனது வேண்டுகோளை மறந்திடாமல் நிறைவேற்ற வேணும்; அது யாதெனில்; என்னுடைய நெஞ்சினார் ஸ்ரீவைகுண்டநாதனை இங்கே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வருவதாகவோ அல்லது ஏதேனும் ப்ரஸாதம் பெற்று வருவதாகவோ நித்யவிபூதிக்குச் சென்றார்; இன்னமும் மீண்டுவரக் காணோம்; நான் இவ்விடத்திலே இவ்வுலகத்தவரால் உபேக்ஷிக்கப்பட்டு அவஸ்துவாகப் புளியம் பொந்தின் கீழே கிடந்தேனாகிலும் அங்குச் சென்ற என்னெஞ்சினார் அங்குள்ளாரால் கௌரவிக்கப்பெற்றுச் சீரிய சிங்காசனத்திலமர்ந்து ‘பரோக்; ஸ்வாமி பரோக்!! அருளப்பாடு நம்மாழ்வார் நெஞ்சினார்’ என்ற திருப்பரியட்டமும் சாத்தப்பெற்று மேனாணிப்புத் தோற்ற வீற்றிருப்பவர்; எம்பெருமானுடைய அந்தரங்க ஸந்நிதானத்திலே யிருப்பர்; கண்டவாறே அவர் இன்னாரென்னு நீங்கள் கண்டுணரப் பெறலாம்; கண்டு ‘ஓய்! நீர் குருகூர்ச் சடகோபனேன்னும் பராங்குச நாயகியின் நெஞ்சினாரன்றோ?’ னஎறு அவர்க்க என்னை ஞாபகமூட்டி, ‘உம்மை அவர் இங்கேயனுப்பி எத்தனை நாளாயிற்று; இன்னமும் இவ்விடத்திலேயே இருக்கிறீரே; வந்த காரியத்தை இரண்டத் தொன்று பார்த்துக் கொண்டு மீண்டும் செல்லாதே இங்ஙனே தாமதித்திருப்பது தகுதியோ? அந்தரங்கமென்று அவர் உம்மைத் தூதனுப்பினதற்கு இதுவோ தக்க செயல்?’ என்று உறைக்கச் சொல்லுங்கோள்” என்கிறாள்.

“மறவேன்மினோ”  என் கையாலே, இதற்கு முன்பு இப்படியே சில பறவைகளிடத்துத்தாம் சொல்லியனுப்பினமையும் அவை மறந்தொழிந்தமையும் தொனிக்கும். “இவள் பிரகிருதிய பற்றியும் நாயகன் மறந்தான்; அவன் கைப்பின்னே போன நெஞ்சும் மறந்தது; இனி யார்தான் மறவாதார்!” என்பது நம்பிள்ளை வீடு. மறப்பது உங்களுக்கு இயற்கை யல்லாவிடினும் அவ்விடத்துச் சேர்க்கையால் மறக்க நேரும்; அதுவேண்டா என்றவாறு கண்ணன் என்றது ஸௌலப்ப வாசகம். வைகுந்தன் என்றது பரத்வ வாசகம். “கண்ணன் வைகுந்தனோடு என் னெஞ்சினாரைக் கண்டால்” என்றதனால் தனது ஸௌலப்யத்தை முன்னம்  காட்டி என் மனதைக் கவர்ந்துகொண்டு தனது பரத்வத்தால் என்னை இன்றளவும் வந்து கலவாது நிற்பவனிடத்து என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறது என்பதாக விளங்கும். தலைமகனிடத்துத் தனக்கு உள்ள கௌரவத்தினால் அவனைப் பற்றிச் சென்ற மனத்தை ‘நெஞ்சினார்’ என்று உயர்த்திக் கூறினான்.

பரமபத நிலயனான எம்பெருமானைக் காணிலும் காணலாம்; அவனைத்தான் சேர்ந்த பலத்தாற் செருக்கி நிற்பதும் அவது அந்தரங்க பரிவாரங்களுள் தானுமொன்றாய்விட்டதுமான நெஞ்சைக் காணுதலரிது என்பது தோன்ற ‘வைகுந்தனோடு நெஞ்சினாரைக் கண்டால் என்றான்.

என்னைச் சொல்லி = அந்த நெஞ்சுக்கு உடையவன் நானென்பதையும், எனது உடைமை அது வென்பதையும் தோன்றச் சொல்லி; எனவே, இவற்றையெல்லாம் நெஞ்சம் மறந்திருக்கின்றமை தோன்றும். புருஷோத்தமனாகிய சிறந்த நாயகனைத் தான் கூடியதனாலாகிய மேன்மையைப் பற்றி தன்னைப்பிறர் உயர்த்திச் சொல்ம் வகையால் ‘அவர்’, என்றது. [அவரிடை நீர் இன்னஞ் சொல்லீரா?]  ஓ நெஞ்சினாரே! நீர்வருகிற பொழுதே ஆற்றாமைமிக்க அவரிடத்து அவருக்கு அந்த: கரணமான நீர்  அவர் துயரையறிந்து தீர்த்திடாமல் நாயகன் பொருட்டேயன்றி உம்பொருட்டும் அவர் தூதுவிடும்படி இன்னமும் போகாதிருக்கலராமோவென்று சொல்லுங்கோள்.

பறந்து செல்லும் பறவைகளுள் இன்னது முன்பு செல்லுமென்று அறியாமையால் ‘செல்வீர்கள்’ என்றும் ‘மறவேன்மினோ’ என்றும் ‘இசைமின்கள்’ என்றும் பன்மையாற் கூறினான். சீவக சிந்தாமணியில் (காந்தருவதத்தையாரிலம்பகம். 2.53) “தனக்கயத்துழக்கி வென்றீர் தையலைச் சார்மின்” என்ற விடத்து நச்சினார்க்கினியர் “துணிய லாகாமையின் பன்மையாற் கூறினான்” என்றமையால் இன்னாரென்று நிச்சயம் தோன்றாத விடத்துப் பன்மையாற் கூறுதல் இலக்கணமா மென்றுணர்க. அன்றி, முன்னே செல்பவரெல்லாம் கண்டு சொல்லுங்கள் என்பதாகவும் கொள்ளலாம்; பலரும் பழித்துக் கூறினால் ஒருகால் திரும்பிவரக்கூடுமென்று கருத்து. இங்ஙனம் பலவற்றையும் ஏககாலத்தில் தூதுவிடுதலால், ஒன்றை முன்பு தூதுவிட்டு அதுபோய்க் காரியம் பார்த்து வருமளவும் பொழுது போக்கி ஆறியிருக்கமாடடாமை தோன்றும். அபிநிவேசத்தின் முதிர்ச்சி யிருக்கிறபடி.

ஆழ்வார், தம்மை எம்பெருமான் பக்கல் சேர்ந்ததற்கு உரிய ஆசாரியராகச் சிலரை வரித்து அவர்களை நோக்கிச் சொல்லும் வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள். அவர்களிற் சிறந்தாரை அன்னமென்’றும் சிறிது தாழ்ந்தாரை வண்ணடானமென்றுங் குறித்தது. ‘செல்வீர்’ என்றதனால் அவர்கள் எம்பெருமானது திவ்ய தேசத்தை நோக்கிப் பிரயாணப்பட்டமை தோன்றும்.

எம்பெருமானை இடைவிடாது நினைத்திருக்கையினும் அவனைச் சேர்ந்து அநுபவித்து ஆநந்திக்கப் பெறாமையாலுண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்திரப்பதே நன்று என்று அன்பு மகுதியால் ஒரு வெறுப்புக்கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறாரென்க…

English Translation

O Swans preparing for flight! O Herons preparing for flight!  I beg and plead of you. Whoever goes there first, do not forget, If you see my heart with the Valikunta lord Krishna, tell him, -my heart, -about me, impress upon him and ask, “Do you still not go back? Is this proper?”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top