(2508)

(2508)

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.

பதவுரை

அம்பொன்

அழகிய பொன்னும்
மா மணிகள்

சிறந்த ரத்னங்களும்
திசை

திக்குகள் தோறும்
மின் மிளிரும்

மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து

திருவேங்கட மலையினது
மேகங்கள்

மேகங்களானவை
தூது  இசைமின்கள் என்று இசைத்தால்

(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்

(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை

வலிய அடிவாரத்தையுடைய  சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்

மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட

பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்

நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்

(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தூதுபோகச் சொன்னவிடத்தும் போகாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்கிப் பேசும் பரசுரம் இது. திருவேங்கடமலையின்மேற் சென்று சேரும்பொருட்டுப் பிரயாணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் ‘என்னைப் பிரிந்து அங்குச் சென்று வஸிக்கின்ற எனது தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லுமாறு நீங்கள் எனக்குத் தூதராக வேணும்’ என்று வேண்ட, அதற்கு அவை உடன்படக் காணாமையால் மீண்டும் அவற்றை நோக்கி’ அவனுள்ளவிடத்தேறச் செல்லும் பாக்கியமுடைய நீங்கள் அங்ஙனஞ் செல்லமாட்டாத எனது தலையின் மேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல்லுங்கள்’ என்று பிரார்த்திக்க திருமலைத்தலைமேற்சென்று தங்குவதற்கு தவ்ரைப்படுகின்ற அவை இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கும் இசைதல் அரிதாயிருந்த தன்மையைக் குறித்துத் தலைவி இரங்குகின்றாளென்னவுமாம்.

கீழ்ப்பாட்டில் அன்னங்களும் வண்டானங்களையும் தூது வேண்டியவள் அவை அங்ஙனம் தூதுசெல்லக் காணாமையால் ‘இப்பறவைகள்தாம் தம் தம் காரியத்திலேயே கருத்துடைய லாதலால் நம் காரியத்தைச் செய்தனவில்லை’ என்று கருதி மேகங்களை நோக்கி ‘எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறர்க்ஊகு உதவி செய்வதையே இயல்பாகவுடைய இவை காரியஞ் செய்யாமையால் மிக இரங்குகின்றானென்க. இங்ஙனம் பலவாறு கூறி அவற்றுற்குப் பயன் யாதெனில்; மூடியிருந்து வேவதோர் கொள்கலம் மூடி திறந்தவிடத்து ஆவியெழுந்து முன்னின்ற வெப்பம் நீங்கினாற்போல, ஆற்றாமையால் உள்ளே மிக்கு நின்ற தாபத்தை வாய்விட்டு வெளியிட அது சிறிதளவு குறைதலேயாம்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமாக அநுஸந்திக்கவேண்டியவை:- “கீழ் நீலமுண்ட மின்னன்ன மேணிப்பெருமானுலகு, என்று பரமபதத்தே தூதுவிட்டாள்; அது பரபக்தி பரஜ்ஞாந பரமபக்தி யுக்தரானார்க்கல்லது புகவொண்ணாத தேச மாகையாலே அவதாரங்களிலே தூதுவிடப் பார்த்தாள்; அதுவும் ஸமகாலத்தி லுள்ளார்க்காய்ப் பிள்ளையில்லையாகையாலே பிறப்பட்டாருக்கும் அநுபவிக்கலாம்படி ஸுலபமான திருமலையிலே திருவேங்கட முடையான் திருவடிகளிலே மேகத்தைத் தூதாக விடுகிறாள். திருமலைநோக்கிப் போகிற மேகங்களே! என்னுடைய தூதுவாக்கியங்களைக் கொண்டுபோய்ச் சொல்லுங்கோ ளென்றால் சொல்லுகிறிலிகோள்; திருமலைக்குப் போகிற பராக்கிலே பேசாதே போகிறவற்றைக் கண்டு, சொல்லமாட்டி கோளாகில் உங்கள் திருவடிகளை என் தலைமேலே வையுங்கோளென்றால் வைப்புதிகோளோ? திருமலைக்குப் போவாருடைய திருவடிகள் உத்தேச்யமாயிறேயிருப்பது. திருமலைக்குப்போகிறவர்களைத் தலையிலே வைக்கக் கிடைக்குமோ? திருவடியை (ஹநுமானை)ப் பிராட்டி இங்கே ஓரிராத் தங்கிப்போகவேணு மென்று அருளிச்செய்ய, ஒண்ணாது என்று அவனும் மறுத்துப்போனாப்போலே போகா நின்றன.” என்று

ரத்னங்கள் ஒளிவீசுகின்ற திருவேங்கட மலைக்குப் போவதாகப் புறப்பட்ட இம்மேகங்கள் ‘நீங்கள் எனக்காகத் திருமலையப்பன் பக்கல் தூது செல்லவேணும்’ என்று நான் வாய்வார்த்தை மாத்திரத்தால் வேண்டியதற்கு உடப்படுகின்றனவில்லை; அவற்றின் கால் எனது சிரஸ்ஸில் படும்படி சரணாகதி செய்தால் அதற்கு இசைந்து ஒருகால் உடன்பட்டுச் செல்லுமோ என்பது கருத்து. வானத்திற் பறந்து செல்லுகின்ற அன்னம் முதலிய பறவைகளைப் பரமபத நாதனிடம் செவ்வனவாக நினைத்ததுபோலவே மேலே ஊர்கின்ற மேகங்களையும் திருவேங்கடமுடையான் பக்கல் செவ்வனவாக நினைத்தமை யுணர்க. யாரேனும் எங்கேனும் வழி நடந்து சென்றாலும் திவ்விய தேசங்களுக்கு யாத்திரை செல்வதாகவே நினைப்பது ஆழ்வாரது தொழிலாம். “வருவாய் செல்வார் வண்பரிசாரத்திருந்த, என் திருவாழ் மார்பற்கு என் திறம் சொல்லரற் செய்வதென்?” என்பர் திருவாய்மொழியிலும்; வழியிலே ஸ்வகார்ய பாரதகளாயச் செல்பவராகளெல்லாரும் திருவண்பரிசாக மென்னுந் திருப்பதிக்குச் செல்வதாகவன்றோ பாவனை நிகழ்ந்தது.

தூதுவிடுதற்கு உரியதைத் தன் தலைமேல் அடிவைத்துச் செல்லுமாறு வேண்டுதலை 1- என் காணலகங் கழிவாய் இரை தேர்ந்திங் கிளிதமரும், செங்கால மடநாராய்! திருமூழிக்களத்துறையும் கொங்கார பூந்துழாய்முடியெங் குடக்கூத்தற் கென்தூதாய், நுங்கால்க ளென்தலைமேற தெழுமீரோ துமரோடே” என்னுமிடத்துங் காண்க.

இசையிலம் என்றது இசையப்பெற்றிலோம் என்றபடி. ஆம் அசை. மிளிரிய = செய்யவென்றும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; இய – எதிர்காலங்காட்டும் விகுதி. மிளிரிய என்பதைத் தெரிநிலை பிறந்தகாலப் பெயரெச்சமாகக் கொண்டு, ‘மிளிர்ந்த’ என்று உரைத்து மேதங்களுக்கு விசேஷணமாக்கலும் ஒன்று. போவான்- வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது- கீழ் எம்பெருமான் பக்கல் ஆழ்ந்த நெஞ்சை மீட்கும்படி வேண்டப்பட்டவர்கள் ‘இவர் நெஞ்சை மீளச் செய்வது ஸர்வசக்தனான அவ்வெம்பெருமானுக்கும் அஸாத்யமான தொன்றானால் நம்மாற் செய்யலாவதோ?,  என்று கைவிட, பின்பு ஆழ்வார் திவ்யதேச யாத்ராபரராய்த் திருமலையை நோக்கிச் செல்கிற சிலரைக்கண்டு ‘இவர் நம் குறையை எம்பெருமான் பக்கல் விண்ணப்பஞ்செய்து நம்மை அவனோடு சேர்ப்பதற்கு ஏற்ற புருஷகாரமாவர்’ என்று கருதி அவர்களை ஆசாரியாக வரிக்க, அவர்கள் இவர்க்கு ஆசார்யராவதற்கு உடன்படாமையால் 2. “எம்பெருமான் தான் தொழுவார் காண்மின் என் தலைமேலாரே” என்னும்படி இவர் நமது சிரஸ்ஸின் மேல் திருவடிகளை வைப்பதும் புருஷார்த்தமாகும் என்று அதனை வேண்டுகிறபடி.

English Translation

The dark lightning cloud prepares to leave for Venkatam to rain gold and gems everywhere over the strong peaks. When I entreat them to take a message for me, they refuse, will they of least move over my head? Ah, yes!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top