(2506)

(2506)

இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று

அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட

மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா

அன்னன்ன நீர்மைகொ லோகுடிச் சீர்மையி லன்னங்களே.

பதவுரை

குடிசீர்மை இல்

உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்

இவ்வண்ணப் பறவைகள்

(எனன் செய்கின்றனவென்றால்)

இவள்

‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு

(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது

இப்படிப்பட்ட தூதராக
எம்மை

நம்மை
இரந்தாள் என்று

குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா

அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும்

(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;

(இதற்குக் காரணம்)

நீலம் உண்ட

நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன

மின்னல்போன்ற
மேனி

திருமேனியை யுடைய
பெருமான்

எம்பெருமானுடையதான
உலகில்

உலகத்தில்
பெண் தூது செல்லா

பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ

அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகியானவள் அனன்ப்பறவையை வெறுத்துரைக்கும் பாசுரம் இது. தான் தனது நாயகன் விஷயத்திலே தூது செல்லுமாறு அபேக்ஷிக்கச் செய்தேயும் அது செய்யாதே தன் பேடையோடு உல்லாஸமாக உலாவித் திரிகிற அன்னங்களைக் குறித்து வெறுத்துரைக்கின்றாள். இத்துறை திருக்கோவையாரில் ‘அன்ன மோடழிதல்’ எனப்படும். “உலகமெல்லாம் துயிலாநின்ற இந்நிலைமைக் கண்ணும் யான் துயிலாமைக்குக் காரணமாகிய என் வருந்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாது. தான் தன் சேவலைப் பொருந்திக் கவற்சியின்றித் துயிலாகின்றது என அன்னத்தோடு அழிந்து கூறாநிற்றல்” என்பது அவ்விடத்து உரை.

ஸாக்ஷரத் புருஷோத்தமனாகிய ஸர்வேச்வரன் விஷயத்தில் அது செல்வதானது தாழ்ந்த இடத்துக்கு தூது செல்வதுபோல் இகழத்தக்கதன்றியே மிகக் கொண்டாடத் தக்கதென்பது போன்ற ‘இன்னன்ன தூது’ என்று சொல்லப்பட்டது. எம்பெருமானிடத்திலே ஸ்வயம் புருஷார்த்தமாகச் செல்ல விரும்ப வேண்டியது ப்ராப்தம். அஃது இல்லையாயினும் பிறர்க்குத் தூது செல்லும் வியாஜமாகவாவது போக நேர்ந்தால் பரமபாக்கியமென்று கொண்டு போகலாமே; விரைந்து தூது போவதற்கு உரிய சிறகமைதி முதலிய கருவிகளிற் குறையில்லாமை நோக்கியன்றோ அசக்தி கூறி மறுக்கும்படியான ஜந்துவையோ நான் பிரார்த்திப்பது, நவவியாகரண பண்டிதனான அனுமான் போல்வாரை விடுதற்கு ஏற்ற தூது நமக்குக் கிடைத்ததே! என்றும் இவை நினைக்கின்றன வில்லை; போகாமலும் வாராமலும் இங்கேயே தங்குகின்றனவா யிருந்தாலும் குற்றமில்லை; தம் காரியத்திற்காக இனத்தோடு உல்லாஸமாக அங்குமிங்கும் போய் வருகின்றன; அங்ஙனஞ்செல்லும்பொழுது எம் காரியத்தையுஞ் செய்யலாமே; அதுவுமில்லையே; ‘தன் பெண்மையும் பார்த்து,நாம் பறவை யென்பதும் நோக்காது நம்மைப் பிரார்த்திக்கின்றாளே, இவளுக்குச் சிறிது காரியஞ் செய்வோம்’ என்று இரங்குகின்றனவில்லை; வேறு ஆளைச் சுட்டிக்காட்டிவிட்டு விலகச் சந்தர்ப்பமில்லாதபடி ஆளற்றிருக்கும் நிலைமையையும் நோக்குகின்றனவில்லையே!- என வருந்துகின்றாள் பராங்குசநாயகி.

தன்னுடைய பிரார்ததனையிலும் ஒரு குறையில்லை; அன்னப் பறவைகளின் சக்தியிலும் ஒரு குறையில்லை; அப்படி யிருந்தும் இவை தூது செல்ல முற்பட்டாமைக்கு என்ன காரணமிருக்கக்கூடும்! என்று ஆராய்ந்து பார்த்தாள்; பண்டை யிதிஹாஸங்களில் அனுமன் தூது, கண்ணன் தூது, நளன் தூது  முதலிய வரலாறுகளில் ஆண்கள் பொருட்டாகவே தூது செல்லுதல் மரபாகக் காண்கையாலே பெண் பிறந்தார்க்குத் தூது செல்லதகாதென்று கருதினவோ? என்கிறாள் பின்னடியகளில் தன் கருத்தின்படி நடவாததால் ‘குடிச்சீர்மையிலன்னங்கள்’ எனக் குலத்தையு முட்படப் பழிக்கின்றாள். 1. “நலத்தின் கண் காரின்மை தோன்றின அவனைக், குலத்தின் கண் ஐயப்படும்” (திருக்குறள் குடிமை – 8) என்றபடி. உயர்குடிப் பிறந்தார்க்கு இயல்பாகிய இன்சொல், இகழாமை, உபகாரம்  முதலிய நற்குணங்களில்லாதவளவில் குலக்குறை சொல்லப்படுமாதலால் இவற்றினிடத்து அவையில்லாமை பற்றிக் குடிச்சீர்மையில்லாத அன்னங்களென்றது. எம்பெருமானது திருமேனியிலுள்ள கருமை நிறத்தையும் திவ்விய வொளியையும் பற்றி ‘நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான்’ என்றது. ‘மின் உண்ட நீலமன்னமேனி’ என மாற்றி அநவயித்து, மின்னற் கொடியை நடுவிலே கொண்ட நீலமேகத்தையொத்த திருமேனியெனக் கூறினால், மின்னல்- திருமார்பிலுள்ள நாச்சியாருக்கும், மேகம்- திருமேனிக்கும் உவமையாம்.

ஸ்வாபதேசத்தில் ‘தூது’ என்பது ஆசார்ய விஷயத்தை யென்பர். எம்பெருமானைச் சேரப்பெறாத ஆழ்வார் தம்முடைய ஆற்றாமையை ஒருவர் முகமாக அவனுக்கு அறிவிக்க நினைத்துத் தாம் வேண்டிய விடத்திலும் ஒருவரும் தகுந்தவர் நேரிடாமல் அவரவர் தம் தம் காரியத்திலே ஊன்றியிருக்க, ஆழ்வார் வெறுத்துக் கூறும் வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள். ஹம்மையானது வெண்ணிறமுள்ளது; பக்ஷிகளுட் சிறந்தது; பாலையும் நீரையும் பகுத்து நீரையொழித்துப் பாலையுட்கொள்ளுந் தன்மையது; இதுபோல ஸத்வகுண பரிபூர்ணனாய் மற்றையோரினும் மேம்பட்டு விலக்ஷணனாய் ஸாராஸாரங்களைப் பகுத்துணர்ந்து அஸாரத்தைத் தள்ளி ஸாரத்தை க்ரஹிக்கும் இயல்புடையவனான நல்லாசிரியன் விவக்ஷிதன்.

இரண்டாமடியில், சொல்லா… சொல்லாமல் என்றபடி; ஈறுகெட்ட எதிர்மனையினையெச்சம்

English Translation

Knowing that I spoke out thus and thus, only because I was alone without help. Well-bred swan-pairs would sift out the good from the bad and take my sweet words alone as message to my lord.  O lit-bred swans!  Have there ever been swans refusing to take maiden’s messages in the blessed world of the cloud-and-lightning hued lord?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top