(1736)

(1736)

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.

 

பதவுரை

கண் ஆர்

கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான)

கண்ணபுரம்

திருக்கண்ணபுரத்திலும்

கடிகை

திருக்கடிகாசலத்திலும்

தண் ஆர்

குளிர்ச்சி பொருந்திய

தாமரை சூழ்

தாமரைகளாலே சூழப்பட்ட

தலைச்சங்கம் மேல் திசையுள்

தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும்

விண்ணோர்

நித்யஸூரிகளுக்கு

நாள் மதியை

நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய்

விரிகின்ற வெம் சுடரை

உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை

இங்கு

இந்நிலத்திலே

கண் ஆர கண்டுகொண்டு

கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று

களிக்கின்றது

ஆநந்திப்பது

என்று கொல்

என்றைக்கோ?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கண்ணபுரத்திலும் திருக்கடிகையிலும் தலைச்சங்க மேல்திசையிலும் நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கின்ற எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெறும் நாள் என்றைக்கோ என்று குதூஹலிக்கிறார்.

கண்ஆர் கண்ணபுரம் = வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும்படி மிக அழகிய திருக்கண்ணபுரம் என்றவாறு.  அன்றியே, இடமுடைத்தான (விசாலமான) திருக்கண்ணபுரம் என்றுமாம்.  கண்-இடம்.

தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை = சோழநாட்டுத் திருப்பதிகளுள் ‘தலைச்சங்க நாண்மதியம்’ என்பது ஒரு திருப்பதி.  (திருநாங்கூர் ஸமீபத்திலுள்ளது.) அங்குள்ள எம்பெருமானுக்கு ‘நாண்மதியப் பெருமாள்’ என்று திருநாமம்.  சிறந்த திருச்சங்கையேந்திய நாண்மதியப் பெருமானையுடைய தலமாதல் பற்றித் தலைச்சங்க நாண்மதியம் என்று திருநாமமென்பர்.  இது ‘தலைச்சங்காடு’ என்று வழங்கப்படும்.  ‘தலைச்சங்கநாடு’ என்பது மருவிற்றுப் போலும்.  தலைச்சங்கப் பெருமாளுடைய இருப்பிட மென்றவாறு.  “கைப்பால் அலைச்சங்கமேந்த மணியரங்கத் தம்மான், தலைச்சங்க நாண்மதியத் தான்” என்பது ஐயங்காரது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம்.  இத்தலத்திற்குப் பாடல் ஆழ்வார் திவ்யஸூக்திகளுள் இஃதொன்றும், பெரியதிருமடலில் “நன்னீர்த் தலைச்சங்க நாண்மதியை” என்பதும்.

 

English Translation

The Lord resides in beautiful kannapuram, kodigai, and the cool fragrant lotus-filled westerly Talaichangam Nanmadiyam, extolled by celestials as the fresh Moon and the rising Sun.  Oh! when will I see them all together here and enjoy them to my heart’s content?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top