(1716)

(1716)

புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய

நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்

வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை

கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே.

பதவுரை

நிதி குவை

பொற்குவியல்களையுடைய
கலம்

மரக்கலங்கள்
மனு

பொருந்தி யிருக்கப்பெற்ற

(ஸமுத்ரத்தை சமீபத்திலுடைத்தான)

கணபுரம்

திருக்கண்ணபுரம்,-
புலம் மனு

இந்த்ரியங்கள் அழுந்திக்கிடக்கும் படியாக அழகுவாய்ந்த
மலர் மிசை

தாமரைப் பூவிலுண்டான
மலர்மகள்

பெரிய பிராட்டியோடு
புணரிய

கூடின
நிலம் மகள்

பூமிப்பிராட்டியார்
என இன

என்று இப்படிப்பட்ட
மகளிர்களிவரொடும்

திவ்ய மஹிஷிகளோடும்
வலம் மனு

வலத்திருக்கையில் பொருந்திய
படை உடை

திருவாழிப்படையையுடைய வரும்
மணி வணர்

நீலமணிபோன்ற நிறத்தை யுடையவருமான
அடிகள் தம்

ஸ்வாமியினுடைய
இடம்

திவ்யதேசமாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கண்ணபுரம் ஸமுத்ரத்திற்கு ஸமீபத்திலுள்ளதாதலால் ‘நிதி’ குவைக்கலமனு கணபுரம், எனப்பட்டது.  த்வீபாந்தரங்களி லிருந்து சிறந்த சரக்குகளை ஏற்றிக்கொண்டு வருகின்ற கப்பல்கள் கடலில் பெரும்பான்மையாகக் காணப்படுதல் இயல்பு. கீழ், திருக்கடல் மல்லைத் திருப்பதிகத்தில் “புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும், நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்தெங்கும் நான்றொசிந்து, கலங்களியங்கும் மல்லை” என்றருளிச் செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘நிதி’ என்னும் பல பொருளொருசொல் இங்கு பொன் என்ற பொருளில் வந்தது.  இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வாக்கியம்;- “பொற்குவை மரக்கலங்களையுடைய திருக்கண்ணபுரம்.  கடலொருபுறமாயிருக்கும் போலேகாணும்” என்பதாம்.  “கலங்கல் முந்நீர்க்கண்ணபுரத்து” என்று மேல் திருமொழியிலுங் காண்க.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலுந் திகழநிற்கும் பெருமானுடைய உறைவிடம் திருக்கண்ணபுரம் என்றதாயிற்று.

புலமனுமலர் – கண் முதலிய இந்திரியங்களை ஆகர்ஷித்துத் தன்னிடத்திலேயே நிலைநிற்கச் செய்யவல்ல (மிக அழகிய) மலர் என்றவாறு.  “புலமனு மலர்மிசை மகள்” என்னுமளவே போதுமாயிருக்க, மீண்டும் ‘மலர்மகள்’ என்றதில் புநருக்தி சங்கிக்க வேண்டா; ‘மலர்மகள்’ என்றது ஸம்ஜ்ஞையாகக் கொள்ளத்தக்கது.

வலமனுபடை = இங்குப் படை யென்னும் பொதுச் சொல் ஆழிப்படையென்ற சிறப்புப் பொருளில் வந்தது.  மணிவணர் – மணிவண்ணர்; தொகுத்தல்.

English Translation

The Lord of gem-hue who wields a discus in Prayoga-mudra and stands with the lotus-dame Lakshmi and Earth Dame standing by him on eitherside, resides in kannapuram where boats carrying riches crowd the shore at all times.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top