(1655)

(1655)

கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால்,

வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால்,

பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால்,

கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

கொற்றம் புள் ஒன்று ஏறி

வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு

மன்று ஊடே

திருவீதியிலே

வருகின்றான்

எழுந்தருளுகிறான்

என்கின்றாள் ஆல்-;

வெற்றி போர்

ஜயசீலமான யுத்தத்திலே

இந்திரற்கும் இந்திரனே ஒக்கும் என்கின்றாள்

மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்;

அவன் ஆகம்

அப்பெருமானுடைய திருமார்பை

பெற்றக்கால்

பெற்றால்

பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாள்

பெண்ணாய் பிறந்த நாம் வாழ்ந்துபோக மாட்டோமோ என்கிறாள்;

கற்ற நூல் மறை ஆளர்

(முறையே) கற்கப்பட்ட சாஸ்த்ரங்களை யுடையரான வைதிகர் வாழ்கிற

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- 1. “வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித் தாமரைக்கண்ண னென்னெஞ்சினூடே, புள்ளைக்கடாகின்ற ஆற்றைக்காணீர்” என்ற பராங்குச நாயகிக்கு நெஞ்சினுள்ளே கருடவாஹந ஸேவை ஸாதித்தான் எம்பெருமான்; அங்ஙனன்றிக்கே இப் பரகால நாயகிக்காகத் திருவீதியூடே கருடவாஹந ஸேவை ஸாதித்தான் போலும்.  ஆகவே ‘கொற்றப்புள் ஒன்றேறி மன்றூடே வருகின்றான்’ என்கிறாள்; தாஹித்தவர்கள் இருந்த விடங்களிலே சாய்கரகத்தைக் கொண்டுவந்து சாய்ப்பாரைப்போலே என்னொருத்திக்கே யல்லாமல் மற்றும் என்னைப்போன்ற அன்புடையார்க்கும் ஸேவைஸாதிக்கப் பெரிய திருவடியின் மீதேறி வீதியூடே வந்து உலாவுகின்றான் காண்மின் என்கிறாள்.  ஒருவர்க்குந் தெரியாமல் வந்து என் கண்ணுள்ளே யிருக்க வேண்டியவன் மஹோத்ஸவமாகத் தெருவோடே வருகிறானே, யாரேனுங்கொள்ளைகொண்டு ஸ்வாநுபவ மாத்திரத்திலே நிறுத்திக்கொள்ளப் போகிறார்களே! என் செய்வேன் என்கிறாள் போலும்.

அப்படி யாரேனும் தன்னைக் கொள்ளை கொண்டாலும் அவர்களுக்குப் பிடிகொடாதே உத்தேசித்தவிடத்தே வந்து சேர்தற்கு உரிய பராக்ரமத்தில் குறையுடையனல்லன்; வீர்யத்தில் மஹேந்த்ரனை ஒத்திருப்பனென்கிறாள்.  ‘வெற்றிப்போர்’ என்பது வழங்கி வரும் பாடம்; ‘வெற்றிப் போர்’ என்னும் பாடமே வியாக்கியானத்திற்குப் பொருந்தும்.  “வெறும் போரில்”  என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீஸூக்தி.

(பெற்றக்கால் இத்யாதி.) பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அணைந்து வாழ்வதற்கென்றன்றோ அவன் திருமார்பு படைத்தது; ஒருத்தியைத் திருமார்பிலேயே வாழ வைத்திருக்கின்றானல்லனோ? அங்ஙனே நமக்கும் அத்திருமார்பைப் பெறுவித்தால் பெண்பிறந்த நாமும் வாழ்ந்து போகமாட்டோமோ வென்கிறாள்.  இத்தனை அபிநிவேசம் இவளுக்குண்டானமை காண்கையாலே இவள் வைதிக வித்வான்கள் வாழும் திருக்கண்ணபுரத்து எம்பெருமானைக் காணப்பெற்றாளாக வேணும்.

 

English Translation

“Riding a victorious bird, he roams about freely”, she says, then, “He is indra even to Indra, the victorious king of gods”, “If only we receive his embrace, we born as females may survivel”,she says, I wonder if she has seen the Lord of kannapuram where learned Vedic seers live.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top