பத்தாந் திருமொழி
(3220)
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,
நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.
(3221)
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண்,
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்,
கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே.
(3222)
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.
(3223)
பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம்
செற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்
தரியி னை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே.
(3224)
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய,
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி,
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை,
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே.
(3225)
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற் கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான்,
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே.
(3226)
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால்,
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே.
(3227)
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான்,
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய்,
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே.
(3228)
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான்,
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு,
நக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே.
(3229)
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய்,
அளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும்,
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை,
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே.
(3230)
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
பாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,
வீடும்பெறுத் தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே.
