முதல் திருமொழி
(3121)
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.
(3122)
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.
(3123)
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே.
(3124)
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,
நின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே.
(3125)
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே?
(3126)
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?
(3127)
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே?
(3128)
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே?
(3129)
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
(3130)
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே?
(3131)
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.
