(2615)
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
(2616)
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
(2617)
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.
(2618)
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
(2619)
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
(2620)
அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப
ரவனாம் அவனென் றிராதே,- அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.
(2621)
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
(2622)
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.
(2623)
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
(2624)
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
