(223)
தன்னே ராயிரம் பிள்ளை களோடு தளர்நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை துஞ்சவாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(224)
பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து
மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(225)
கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்
இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீஉன்னை என்மக னேயென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(226)
மையார் கண்டமட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்துஅவர் பின்போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று குற்றம் பலபல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ புத்தகத் துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(227)
முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி
கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலந விம்மிவிம் மியழு கின்ற
அப்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(228)
கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறைமண்டித் தின்ன
விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழல் கன்னி யொருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(229)
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு வாய்வைத்துஅவ் வாயர்தம் பாடி
சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துஉன்னைச் சுற்றும் தொழநின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்றகுற் றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(230)
வாளா வாகிலும் காணகில் லார்பிறர் மக்களை மையன்மை செய்து
தோளா லிட்டுஅவ ரோடு திளைத்துநீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(231)
தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப்பின்பு போவர்
நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை நேர்பட வேகொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பன வேசெய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(232)
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்துஇரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான்ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
(233)
கரார் மேனி நிறத்தெம்பி ரானைக் கடிகமழ் பூங்குழ லாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான் அம்மம்தா ரேனென்ற மாற்றம்
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பட்டர்பி ரான்சொன்ன பாடல்
ஏரா ரின்னிசை மாலை வல்லார் இருடீகே சனடி யாரே.
