(381)
காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையி னால்அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ
நாயகன் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(382)
அங்கொரு கூறை அரைக்கு டுப்பத னாசையால்
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்
செங்க ணெடுமால் சிரீதரா என்றுஅ ழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(383)
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய் வான்பிறர் பேரிட்டீர்
பிச்சைபுக் காகிலும் எம்பி ரான்திரு நாமமே
நச்சுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(384)
மானிட சாதியில் தோன்றிற்றுஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட் டால்மறு மைக்கில்லை
வானுடை மாதவா கோவிந் தாஎன்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(385)
மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர்மல வூத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட் டால்மறு மைக்கில்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(386)
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று
நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(387)
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுஅங்கு
எண்ணமொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(388)
நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்
நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(389)
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்உங்கள்
மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
(390)
சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய
வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி யொண்தமிழ் ஒன்பதோ டொன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே.
