(349)
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற
உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை
பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும்கொண்டு
விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே.
(350)
கஞ்சனும் காளியனும் களிறும்மரு தும்எருதும்
வஞ்சனை யில்மடிய வளர்ந்தமணி வண்ணன்மலை
நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி நளிர் மாமதியை செஞ்சுடர்
நாவளைக்கும் திருமாலிருஞ் சோலையதே.
(351)
மன்னு நரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்தகடல் வண்ணன்மலை
புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று
பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ் சோலையதே.
(352)
மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை
கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே.
(353)
பலபல நாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை
அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.
(354)
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக
தோண்ட லுடையமலை தொல்லைமாலிருஞ் சோலையதே.
(355)
கனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை
கனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்
இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே
(356)
எரிசித றும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த
அரைய னமரும்மலை அமரரொடு கோனும்சென்று
திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ் சோலையதே.
(357)
கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில்மண் கொண்டளந்து
மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறையென்று
ஓட்டரும் தண்சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே.
(358)
ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.
(359)
மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை
நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.
