முதல் திருமொழி
(3231)
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.
(3232)
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.
(3233)
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.
(3234)
நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.
(3235)
பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.
(3236)
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
(3237)
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.
(3238)
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.
(3239)
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
(3240)
குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே
(3241)
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.
