எட்டாந் திருமொழி
(3418)
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!
(3419)
எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.
(3420)
என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்,
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள்,
சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.
(3421)
செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
(3422)
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!
தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
(3423)
சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!
(3424)
அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,
எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.
(3425)
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்,
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது,
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.
(3426)
இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை,
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.
(3427)
வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
(3428)
உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
