ஏழாந் திருமொழி
(3407)
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
(3408)
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.
(3409)
கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா,
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,
அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.
(3410)
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?
(3411)
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே.
(3412)
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை,
வானநா யகனே! மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை
வான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே.
(3413)
வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய்தந்தையே! முழுஏழுலகு முண்டாய்,
செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.
(3414)
அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன்,
அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே!
(3415)
புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய். எருதேழ் அடர்த்த,என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை,
உள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமா றெனக்கே.
(3416)
ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர்கைம்
மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,
சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்! தெய்வ நாயகனே!
(3417)
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.
