முதல் திருமொழி
(3341)
கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.
(3342)
போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே!
தேனே இன்னமுதே! என்றென்றேசில கூற்றுச் சொல்ல,
தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,
வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே.
(3343)
உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!
(3344)
என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்,
வன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து,
நின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்,
என்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே.
(3345)
கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.
(3346)
புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும்,
முறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன்,
நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண்,
அறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே.
(3347)
அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்யானார்,
எம்மா பாவியர்க்கும்வி திவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,
கைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே,
மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே.
(3348)
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே.
(3349)
ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே.
(3350)
ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.
(3351)
கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,
ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,
சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.
