(3561)
உண்ணி லாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லேஅமு தேஅப்ப னேஎன்னை யாள்வானே!
(3562)
என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய் திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லேஅமு தேகார் முகில்வண்ண னேகடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய் வினை யேனுடை வேதியனே!
(3563)
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோது வித்து,
உன் திருவடிச் சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய் தொண்ட னேன்மது சூதனனே.
(3564)
சூது நானறி யாவகை சுழற்றியோர் ஐவரைக் காட்டி,உன்அடிப்
போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால் ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!
(3565)
தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ.
(3566)
விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய் யாமற்று நீயும்விட்டால்?
பண்ணு ளாய்கவி தன்னுளாய் பத்தியினுள் ளாய்பர மீசனே! வந்தென்
கண்ணுளாய் நெஞ்சுளாய்! சொல்லுளாய் ஒன்று சொல்லாயே.
(3567)
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவருளில் லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகின்னமுதே!
(3568)
இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே!
(3569)
குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!
(3570)
என்பரஞ் சுடரே! என்றுன்னை அலற்றியுன் இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற் கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை வலித்தெற்று கின்றனர்
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ!
(3571)
கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள் படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துளிப்பத்தும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே.
