ஐந்தாந் திருமொழி
(1992)
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.
(1993)
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே.
(1994)
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே.
(1995)
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே.
(1996)
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.
(1997)
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே.
(1998)
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.
(1999)
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.
(2000)
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.
(2001)
கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி
உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே.
