ஏழாந் திருமொழி
(75)
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.
(76)
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம்
மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.
(77)
பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன
என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல்
நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்
அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.
(78)
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலாஅம்புலீசந்திரா வாவென்று
நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்
கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
(79)
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.
(80)
தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.
(81)
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.
(82)
குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.
(83)
அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.
(84)
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக்க்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.
(85)
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்
வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.
